மாயமான வக்கீல் கிருஷ்ணமூர்த்தியை கடத்திச் சென்று மிரட்டினரா அதிமுகவினர்?
சென்னை: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்வதற்காக தீர்ப்பு நகலை வாங்க பெங்களூரு சென்ற வக்கீல் கிருஷ்ணமூர்த்தியை அதிமுகவினர் கடத்தியதாக புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு அப்பீல் வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தார். இந்த விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்வேன் என்று உச்ச நீதிமன்ற வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி அறிவித்தார்.
இதற்காக பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமையன்று நேரில் ஆஜராகி ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு நகலை கேட்பேன் என்று செவ்வாய்கிழமை அறிவித்தார். அதன்படி நேற்று காலை சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல ரயில் ஏறினார். அவரை திருப்பத்தூரில் வைத்து போலீசார் மடக்கிப் பிடித்ததாக தகவல்கள் கூறின. இதனை போலீசார் மறுத்தனர்.
உச்சநீதிமன்றத்தில் மனு
இதனிடையே அவரது நண்பர் ராஜாராம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில் வக்கீல் கிருஷ்ண மூர்த்தியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரினார். கிருஷ்ணமூர்த்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக, கர்நாடகா தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ராஜாராம் என்பவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்துவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். ஆனால் மனு சரியாக இல்லை என்றும் மீண்டும் தாக்கல் செய்யுமாறும் தலைமை நீதிபதி கூறவே நாளை தனது மனுவை ராஜாராம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்பட்டது.
கடத்திய அதிமுகவினர்
இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணமூர்த்தி செல்போனில் செய்தியாளர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, திருப்பத்தூரில் என்னை அதிமுகவினர் சிலர் மிரட்டி சிறை பிடித்து வைத்தனர். அதில் ஒரு போலீஸ்காரரும் இருந்தார். அம்மா வழக்கு தீர்ப்பு நகலை பெற கூடாது என்று மிரட்டினர். ஒழுங்காக டெல்லி சென்று விடு என்று மிரட்டினர். மாலை ஆனதும் என்னை விடுவித்து விட்டனர் என்றார். இதனிடையே கிருஷ்ணமூர்த்தி தற்போது பெங்களூரில் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிபதி குமாரசாமி கணக்கில் தவறு
முன்னதாக அவர், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர் வங்கிகளில் இருந்து வாங்கி கடன் தொகை கூட்டலில் தவறு நடந்து இருப்பது அம்பலமாகி உள்ளது. இதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்து 8 சதவீதத்தில் இருந்து 76 சதவீதமாக உயர்துள்ளதாக கூறினார்.
தலைமைநீதிபதியிடம் முறையீடு
வருமானத்திற்கு அதிகமாக 10 சதவீதம் அளவு சொத்துக்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கொள்காட்டியே ஜெயலலிதா உள்ளிட்டோரை குமாரசாமி விடுவித்து இருப்பதால் தற்போது அந்த தீர்ப்பு செல்லுமா என கேள்வி எழுந்துள்ளதாக கூறிய கிருஷ்ணமூர்த்தி குமாரசாமியின் தீர்ப்பை திரும்ப பெற கோரி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட இருப்பதாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தை நாட முடிவு
நீதிபதி குமாரசாமியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தயிருப்பதாகவும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அளிக்கும் பதிலின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தை நாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே அவர் மாயமானதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அவரே செய்தியாளர்களிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications