அதற்குள் வெள்ள நி்வாரணத்துக்காக ரூ. 100 கோடியை செலவழிச்சிருச்சாமே கடலூர் மாவட்ட நிர்வாகம்.. ??
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணமாக இதுவரை மாவட்ட நிர்வாகம் ரூ. 100 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் வெள்ளத்தில்தான் மிதக்கின்றன. அடிப்படை நிவாரண வசதிகள் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் செய்து தரப்படவில்லை. இந்த நிலையில் அதற்குள் எப்படி ரூ 100 கோடியை செலவிட்டார்கள் என்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது.
தமிழகத்தை உலுக்கிய கன மழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரத்தைப் போலவே கடலூர் மாவட்டமும் மிகப் பெரிய இழப்பையும், பாதிப்பையும் சந்தித்துள்ளது.
கடலூர் மாவட்டம் ஊரகப் பகுதிகளை அதிகம் கொண்ட மாவட்டம் என்பதால் அங்கு வி்வசாயிகள் மிகப் பெரிய பாதிப்பையும், சேதத்தையும் சந்தித்துள்ளனர். ஏற்கனவே தானே புயலால் அவர்களது வாழ்வாதாரம் சீர்குலைந்தது. இந்த நிலையில் இந்த பெருவெள்ளம் அவர்களை நிலை குலையச் செய்துள்ளது.

ஒரு மாத மழை
சென்னை, காஞ்சிபுரத்தைப் போலவே கடலூரிலும் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு பேய் மழை கொட்டித் தீர்த்து விட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சொல்லி மாள முடியாது.

வடியாத வெள்ளம்
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் வெள்ள நீரில் மிதந்து வருகின்றன. குறிப்பாக கோண்டூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகவே காட்சி தருகின்றன. இங்கு மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

சாலைகள் சேதம்
மாவட்டத்தின் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து விட்டன. கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் 6 அடி அளவுக்கு பள்ளம் தோண்டப்பட்டு அதன் மூலமாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீரில் மிதக்கும் கிராமங்கள்
50க்கும் மேற்பட்ட கிராமங்கள் தொடர்ந்து நீரில் மிதக்கின்றன. இங்கு அடிப்படை வசதிகள் இன்னும் கூட சரிவர போகவில்லை என்கிறார்கள். வெள்ள நிவாரணமும் இங்குள்ள மக்களுக்குக் கிடைக்கவில்லை.

பல ஆயிரம் மக்கள் பாதிப்பு
இந்த மழை வெள்ளத்தால் இன்னும் பல ஆயிரம் மக்கள் பாதிப்பிலிருந்து மீளாமலேயே உள்ளனர். பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் வெள்ள நிவாரண உதவிகளுடன் குவிந்தாலும் கூட அவை முறையாக மக்களைப் போய்ச் சேரவில்லையாம். வழியிலேயே அடித்துப் பிடுங்கும் கும்பல்கள் இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

ரூ. 100 கோடி செலவாம்
இதுவரை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ. 100 கோடி வரை செலவழித்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இன்னும் முழுமையாக வெள்ளம் வடியாத நிலையில், பாதிக்கப்பட்டோர் குறித்த கணக்கெடுப்பு முடிவடையாத நிலையில் எப்படி இவ்வளவு பணத்தை செலவழித்தார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.












Click it and Unblock the Notifications