முதல்வராக தனபாலை முன்னிறுத்தி 30 எம்.எல்.ஏக்களை 'கொத்தாக' வளைக்கும் சசிகலா குடும்பம்
முதல்வராக தனபாலை முன்னிறுத்தி 30 எம்.எல்.ஏக்களை கொத்தாக வளைக்க தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.
சென்னை: சபாநாயகர் தனபாலை முன்னிறுத்துவதன் மூலம் 30 தலித் எம்.எல்.ஏக்களை அப்படியே வளைத்துவிடலாம் என்பது சசிகலா குடும்பத்தின் வியூகங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
அதிமுகவில் அணிகள் விவகாரம் விஸ்வரூபமெடுத்த போது பெரம்பலூர் தமிழ்ச் செல்வன் தலைமையில் 30 தலித் எம்.எல்.ஏக்கள் ஒன்று திரண்டனர். எடப்பாடி அமைச்சரவையில் தங்களுக்கும் போதுமான பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

உதவி செய்யாமல் இழுத்தடிப்பு
அப்போது உங்களுக்கு நேரம் வரும்போது எல்லாம் செய்கிறோம் என்று மட்டுமே மேற்கு மண்டல லாபி உறுதியளித்தது. ஆனால் கடந்த 5 மாதங்களாக இவர்களுக்கு எந்த ஒரு உதவியுமே செய்யாமல் இழுத்தடித்துவிட்டனர்.

அதிருப்தியில் 30 எம்.எல்.ஏக்கள்
இதனால் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர் இந்த 30 எம்.எல்.ஏக்களும்... இப்போது சபாநாயகர் தனபாலை முதல்வராக்குவோம் என திவாகரன் கூறி வருகிறார். இதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கின்றன. ஜாதிய அடிப்படையில் முதல்வர் தேர்வு என்பது ஆபத்தானது எனவும் எச்சரிக்கின்றனர்.

திவாகரன் நம்பிக்கை
ஆனால் சசிகலா குடும்பமோ, ஏற்கனவே 22 எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவாக உள்ளனர்; ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள் மூலம் 15 எம்.எல்.ஏக்கள் இன்னமும் அணிக்குள் வராமல் எடப்பாடி தரப்பிலேயே இருக்கின்றனர். இதனை குறிக்கும் வகையில்தான் கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், எங்களுக்கு 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என கூறியிருந்தார்.

மேலும் 30 எம்.எல்.ஏக்கள்
இவர்கள் அல்லாமல் தனபாலை முன்னிறுத்துவதன் மூலம் அதிருப்தியில் இருக்கும் 30 தலித் எம்.எல்.ஏக்களையும் அலேக்காக வளைத்துவிட முடியும் என்பதும் சசிகலா குடும்பத்தின் கணக்கு. இதற்கு ஏதுவாகவே ஊழல் அமைச்சர்கள் 5 பேரை நீக்கிவிட்டு இளைஞர்களை நியமிப்போம் என திவாகரன் கூறியிருந்தார். இந்த 30 எம்.எல்.ஏக்களும் ஒட்டுமொத்தமாக தினகரன் அணிக்கு தாவுவது வெகுதொலைவில் இல்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications