முதல்வர் பதவியை விட்டு தானாக விலகிப் போயிருங்க.. தினகரன் "கெடு"!
முதல்வர் தாமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவகாசம் கொடுத்திருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பது தான் தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளதால், அவர் தாமாக பதவி விலக வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி கூட்டிய நிர்வாகிகள் கூட்டத்தில் 77 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர்.
பதவி ஆசையிலும், சுயலாபத்திற்காகவும் தான் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக சாடினார். சசிகலாவால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். முதல்வராக அமர வைத்தவர்களுக்கே அவர் துரோகம் இழைத்து விட்டார்.

ராஜினாமா செய்யணும்
துரோகம் இழைத்தவர்கள் ஆட்சியில் நீடிக்கக் கூடாது. துரோக சிந்தனையில் செயல்படுபவர்களை ஒரு நாளும் விடப்போவதில்லை. எனவே அவர் தாமாக முன் வந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதற்காகத்தான் கால அவகாசம் கொடுத்துள்ளோம்.

வீட்டுக்கு அனுப்புவோம்
இரட்டை இலை சின்னம் முடங்க காரணமான ஓ.பன்னீர்செல்வமும் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றார். துரோகிகளை வீட்டுக்கு அனுப்புவதே எங்களின் முதல் வேலை.

போர்ஜரி வேலை
மத்திய அரசிடம் தமிழக அமைச்சர்கள் தவறான தகவல்களை தருகின்றனர். அவர்கள் போர்ஜரி செய்கின்றனர். ஏற்கனவே 420 என்று அவர்களை கூறியிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியே தங்களுக்கு துரோகம் இழைக்கும் போது, மத்திய அரசையோ, பாரதிய ஜனதாவையோ குறை கூறுவது கண்ணியமாக இருக்காது என்றும் தினகரன் கூறியுள்ளார்.

தினகரன் கெடு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் தினகரன் வலியுறுத்தல். ஆனால் இதற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒத்துக்கொள்வார்களா? அதிமுகவில் இன்னும் என்னென்ன வேடிக்கைகள் காத்துக்கொண்டிருக்கிறதோ?












Click it and Unblock the Notifications