அந்த 300 பேரை கூண்டில் ஏற்றினாலே உண்மை அம்பலமாகும்..தினகரன் வியூகத்தால் தேர்தல் ஆணையத்தில் திகுதிகு
ஓபிஎஸ் தரப்பு போலி ஆவணங்களைத் தாக்கல் செய்திருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறது தினகரன் அணி.
Recommended Video
சென்னை: அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஈ.பி.எஸ் அணி-ஓ.பி.எஸ் அணி தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் போலியானவற்றை எளிதில் கண்டறிந்துவிட்டோம். அதன்படி பார்த்தால் அவர்கள் கூட்டிய பொதுக்குழுவே செல்லாது. எங்கள் தரப்பிடம் இரட்டை இலை வந்து சேரும் என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அணியும் தினகரன் அணியும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கொண்டாடி வருகின்றன. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களில் போலியான கையொப்பம் இருப்பதால், சாட்சியங்களை அழைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என தினகரன் தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. கோரிக்கை ஏற்கப்படாததால், இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என அதிரடியான கோரிக்கையை முன்வைத்தார் தினகரன். இதற்கு முதல்வர் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
விசாரணைகள் ஒத்திவைப்பு
இதனையடுத்து, கடந்த 23-ந் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. அன்றும் எந்த முடிவும் எடுக்கப்படாததால், விசாரணையை வரும் 30-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இரட்டை இலை சாகும்
இதுகுறித்து பத்திரிகையாளர்களிம் பேசிய தினகரன், தேர்தல் ஆணையத்தின் முன்பு எப்படியாவது தங்கள் தரப்பை வலியுறுத்தி இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுவிடலாம் என உறுதியாக இருக்கிறார்கள். எங்கள் தரப்பில் கூறப்படும் தகவல்களை முழுமையாக விசாரித்து முடிவெடுங்கள் என்று கூறுகிறோம். அவர்கள் அளித்த பிரமாணப் பத்திரத்தில் ஏகப்பட்ட முறைகேடுகள் உள்ளன. இதில், எத்தனை குறைபாடுகள் உள்ளன என்பதைத்தான் தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும். அதை விடுத்து ஒருபக்கமாக ஆணையம் செயல்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பினர் கைகளுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். அப்படியேக் கிடைத்தாலும் இரட்டை இலைச் சின்னம் செத்துவிடும். இது ஒரே நாளில் முடிகின்ற விஷயம் இல்லை. யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும் எனக் கொந்தளித்தார்.
இப்படித்தான் போலி பத்திரங்கள்
பிரமாண பத்திரங்களில் போலி என எப்படிக் கூறுகிறீர்கள்? என தினகரன் தரப்பு வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டோம். அ.தி.மு.கவில் 2,300 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூடித்தான் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி-பன்னீர்செல்வம் கூட்டிய பொதுக்குழுவில் 1,500 பேர் வரை பங்கேற்றதாகக் கூறுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 600-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
300 பேரை அழைத்து விசாரித்தால்..
நாங்கள் 300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்களை ஆராய்ந்தோம். இதில், சில இடங்களில் தமிழிலும் பிறகு ஆங்கிலத்திலும் மாறி மாறி கையெழுத்து போட்டிருக்கின்றனர். கையெழுத்து போட்ட பிறகுதான், நோட்டரி பப்ளிக்கிடம் கையெழுத்து சான்று வாங்க வேண்டும். ஆனால், அனைத்து பத்திரங்களிலும் கையெழுத்து போடுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே நோட்டரியிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். இது சட்டப்படி செல்லாது.
இந்த 300 பேருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்திருக்கிறோம். இவர்களை கூண்டில் ஏற்றினாலே, எப்படி கையெழுத்து வாங்கப்பட்டது என்ற உண்மை அம்பலமாகிவிடும். இவர்களது வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு போன்றவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் சிக்கல் ஏற்படும் என்பதால்தான் ஆட்சியில் உள்ளவர்கள் இடையூறு செய்கிறார்கள். இங்கு நியாயம் கிடைக்கவில்லையென்றால், உச்ச நீதிமன்றம் செல்வதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகிறோம் என்றார் உறுதியாக.