இருக்கு, இன்னொரு அதிரடி இருக்கு.. சிறையிலுள்ள சசிகலாவை சந்திக்கிறார் தினகரன்
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரன், பெங்களூர் சிறையிலுள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள சசிகலா சிறை விதிகளை மீறி செயல்பட்டதாக சில மாதங்கள் முன்பு அடுத்தடுத்து புகார்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
இதுதொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அந்த கமிஷன் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையளித்திருந்தது. அதில் சசிகலா சிறை விதிமுறைகளை மீறியது ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
குறிப்பாக, விதிமுறைகளை மீறி அடிக்கடி பார்வையாளர்களை அவர் சந்திக்க சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது அம்பலமானது. இதையடுத்து சிறை விதிமுறைப்படிதான் இப்போது 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பார்வையாளர்கள் சந்திக்க முடிகிறது.
இதையடுத்து சசிகலாவை வரும் 29ம் தேதி தினகரன் சந்திக்க வாய்ப்புள்ளது. சட்டசபைக்குள் நுழைய உள்ள தினகரன், சட்டசபைக்குள் செயலாற்ற வேண்டிய விதம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை சிறப்பு அனுமதி கிடைத்தால் இன்றே சசிகலாவை சந்திக்கலாம் என தினகரன் திட்டமிட்டிருந்தார். ஆனால் இதுவரை அப்படி அனுமதி கிடைக்கவில்லை.