தாமரைக்கனி மகன் இன்பத் தமிழனுக்குப் பதவி...விருதுநகரை வளைக்கப் பார்க்கும் தினகரனின் பிளான்!
ஆட்சியில் இருப்பதால் எம்எல்ஏக்களை நீக்கி நடவடிக்கை எடுக்க, துணை பொதுச்செயலாளர் என்ற உரிமையில் நிர்வாகிகளை மாற்றும் அறிவிப்புகளை தினகரன் வெளியிட்டுள்ளார்.
சென்னை : அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், பாலகங்கா உள்ளிட்டோரை மாற்றி அதிரடி நியமனங்களை அறிவித்துள்ளார்.
ஆட்சியில் இருப்பதால் முதல்வருக்கு எதிராக செயல்படுவோருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் விதமாக கட்சிக் கொறடா ராஜேந்திரன் 19 எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் தந்துள்ளார். இதனையடுத்து அதிமுக அணிகள் இடையேயான உள்கட்சிப் பூசல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
இதனிடையே கட்சியின் துணை பொதுச் செயலாளர்தான் தான் என்றும் கட்சியில் தான் எடுப்பது தான் முடிவு என்றும் தினகரன் கூறி வருகிறார். இந்நிலையில் இன்று நிர்வாகிகளை மாற்றி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் டிடிவி. தினகரன். நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்ட விவரம்:

இன்பத்தமிழனுக்குப் பதவி
அதிமுக (அம்மா) எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.ஆர். சிவபதி மாற்றப்பட்டு அந்தப் பொறுப்பிற்கு இணைச் செயலாளராக இருக்கும் இன்பத் தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்பதோடு விருதுநகர் மாவட்டத்தில் கொடிகட்டி பறந்த தாமரைக்கனியின் மகனும் ஆவார். இன்பத் தமிழனுக்குப் பதவியை கொடுத்து விருதுநகர் மாவட்டத்தை வளைக்கப் பார்க்கிறார் தினகரன்.

பாலகங்கா, ராஜேந்திரன் நீக்கம்
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு, அந்தப் பொறுப்பிற்கு தாம்பரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் கரிகாலன் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று வடசென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் பாலகங்கா விடுவிக்கப்பட்டு அந்த பொறுப்பிற்கு திருவிக நகர் முன்னாள் கவுன்சிலர் சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சி, பெரம்பலூர் செயலர்களும் மாற்றம்
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வாலாஜாபாத் கணேசனை விடுவித்து அந்தப் பொறுப்பிற்கு ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ராமச்சந்திரன் எம்எல்ஏ நீக்கப்பட்டு அம்மா பேரவைச் செயலர் பொறுப்பில் இருந்த கார்த்திகேயன் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சசிகலா ஒப்புதலுடன்
வேலூர் மேற்கு மாவட்டம் மாதனூர், பேரணாம்பட்டு, நாட்றாம்பள்ளி புதிய ஒன்றிய செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதலோடு இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications