லஞ்ச விவகாரம்: டெல்லி காவல்துறை முன் ஆஜராக 3 நாட்கள் அவகாசம் கேட்கும் தினகரன் !
டெல்லி போலீசாரிடம் நேரில் ஆஜராக 3 நாட்கள் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார் டிடிவி தினகரன்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் புகாரில் சிக்கியுள்ள தினகரன் டெல்லி போலீஸ் முன் ஆஜராக மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி.தினகரன் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது கடந்த 17ஆம் தேதி தெரியவந்தது. தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாணையில் டிடிவி தினகரனிடம் இருந்து பணம் பெற்றதை ஒப்புக்கொண்டார். இரட்டை இலைச்சின்னத்தை பெற சுகேஷ் சந்திராவிடம், டிடிவி தினகரன் 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து சுகேஷ் சந்திரகேரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை வந்த டெல்லி போலீசார், நேற்றிரவு சுமார் 11 மணி அளவில், அடையாறில் உள்ள டிடிவி தினகரினின் வீட்டிற்குச் சென்று அவரிடம் சம்மனை வழங்கினர். மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படியும் கேட்டுக் கொண்டனர். அந்த சம்மனில் வரும் சனிக்கிழமை, டெல்லியில் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லி காவல்துறை முன் ஆஜராக, மூன்று நாள் அவகாசம் கேட்டு டி.டி.வி தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.