ஐடி ரெய்டுக்கும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்துக்கும் என்ன சம்பந்தம் ? - டிடிவி தினகரன்
அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதற்கும் ஆர்.கே. நகரில் இடைத்தேர்தலை ரத்து செய்ததற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை என்று டிடிவி தினகரன் கேட்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது திட்டமிட்ட நாடகம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதற்கும் ஆர்.கே. நகரில் இடைத்தேர்தலை ரத்து செய்ததற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை என்றும் அவர் கேட்டுள்ளார்.
ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ. 4000 கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள், நடிகர் சரத்குமார் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பலகோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் நேற்றிரவு அறிவித்தது.

டிடிவி தினகரன் ஆலோசனை
தேர்தல் ரத்து குறித்து ஜனநாயகப் படுகொலை என்று டுவிட்டரில் கருத்து கூறிய டிடிவி தினகரன், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது திட்டமிட்ட சதியே என்று கூறினார்.

முடக்க சதி
தேர்தல் ரத்துக்கு பின்னணியில் மத்திய அரசு உள்ளதாக புகார் தெரிவித்த டிடிவி தினகரன், திமுக, ஓபிஎஸ், பாஜக ஆகியோர் இணைந்து கூட்டுச்சதி செய்துள்ளதாக கூறினார். இரட்டை இலைச் சின்னம் நிச்சயம் எங்களுக்கு கிடைக்கும் எனவும் தினகரன் கூறியுள்ளார்.

என்ன சம்பந்தம்?
ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் வருமான வரி சோதனைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ட அவர், பணம் பறிமுதல் செய்யப்பட்டதற்காக ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்தது ஏன் என்று கேட்டார். பட்டியலை வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றார்.

நான்தான் ஜெயிப்பேன்
கூட்டு சதியினாலே தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகக் கூறிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை எனவும் எப்போது தேர்தல் நடந்தாலும் தாம் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றும் கூறினார். தான் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அச்சத்திலேயே இடைத்தேர்தலை ரத்து செய்து விட்டனர் என்றார்.

எல்லாம் அனுபவம்தான்
அரசியலில் எல்லாம் ஒரு அனுபவம்தான் என்று கூறிய டிடிவி தினகரன், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் தமக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று கூறினார்.
விவசாயிகள் பிரதமரை சந்திக்கத்தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ரூ. 5 லட்சம் பற்றி எனக்குத் தெரியாதே
அப்பல்லோ டாக்டர் பாலாஜிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த ரூ.5 லட்சம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications