மீண்டும் வெடிக்கும் ஈகோ யுத்தம்.. திசைக்கொருவராய் திரும்பும் சசி குடும்பம்!
சசிகலா குடும்பத்தில் மீண்டும் ஈகோ யுத்தம் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன.
சென்னை: சசிகலா குடும்பத்தில் தினகரன், திவாகரன் இடையே மீண்டும் முட்டல் மோதல் வெடிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் தினகரன் கை ஓங்கியபோது திவாகரன் தரப்பு கடும் எதிர்ப்பைக் காட்டியது. சசிகலா படத்தைக் கூட போடாமல் தினகரன் ஆர்கே நகரில் வாக்கு கேட்டார்.
இதற்கு திவாகரன் தரப்பு தினகரனை கடுமையாக விமர்சித்தது. தினகரன் சிறைக்குப் போய்விட்டு திரும்பவதற்குள் அதிமுகவை எடப்பாடி கைப்பற்றிவிட்டார்.
முட்டுச் சந்தில் ஐக்கியம்
இதனால் வேறுவழியே இல்லாமல் தினகரனும் திவாகரனும் கை கோர்த்தனர். ஆனால் இந்த ஐக்கியம் இப்போது முட்டுச் சந்தில் நிற்கிறது.
அறிவிக்கப்படாத பொதுச்செயலர்
தினகரனைப் பொறுத்தவரை அதிமுகவின் முடிவுகளை தாமே அறிவிக்க வேண்டும் என நினைக்கிறார். திவாகரனோ தாமும் ஒரு அறிவிக்கப்படாத பொதுச்செயலர் போல இருக்க வேண்டும் என்கிறார்.
ஜெயானந்த் பிடிவாதம்
திவாகரன் மகன் ஜெயானந்த் அதிமுகவின் பிரதிநிதியாக பேட்டி கொடுப்பதை தினகரன் ரசிக்கவில்லை. ஆனால் திவாகரனும் ஜெயானந்தும் இதை ஏற்பதாக இல்லை.
திவாகரன் - தினகரன்
இதன் உச்சமாகத்தான் திமுக கூட்டத்துக்கும் எம்.எல்.ஏ.க்கள் போவார்கள் என்றார் திவாகரன். ஆனால் தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் திவாகரனின் சொந்த கருத்து என நிராகரித்துவிட்டனர்.
எடப்பாடி தரப்பு
இப்படி சசிகலா குடும்பத்தின் உறவுகளிடையே முட்டல் மோதல் வெடித்திருப்பதை எடப்பாடி தரப்பு அமைதியாக வேடிக்கை பார்க்கிறதாம். டெல்லி ஆலோசனைப்படி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறதாம் எடப்பாடி தரப்பு.