தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்துக்கு எதிரான வழக்கின் நீதிபதி மாற்றம்!
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பணிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இதில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகளின் பணிகள் மாற்றம் செய்யப்படும்.
மதுரை கிளைக்கு அனுப்பப்பட்ட நீதிபதிகள் உயர்நீதிமன்ற பென்ஞ்சுக்கு மாற்றப்படுவார்கள். அதேபோல் சென்னையில் பணியாற்றும் நீதிபதிகள் மதுரைக்கு மாற்றம் செய்யப்படுவார்கள்.

நீதிபதிகள் மாற்றம்
இந்நிலையில் அடுத்த 3 மாதங்களுக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கான பணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

இதுவரை நீதிபதி துரைசாமி
அதன்படி தினகரன் அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் மற்றும் அரசு பெரும்பான்மை நிரூபிக்க கோரும் வழக்கை விசாரணை செய்ய புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நீதிபதி துரைசாமி விசாரித்து வந்தார்.

இனி ரவிச்சந்திர பாபு
அக்டோபர் 4ஆம் தேதி முதல் உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு இந்த வழக்கை விசாரிக்க உள்ளார். இதேபோல் தமிழக சட்ட பேரவையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கோரி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமை குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்டவற்றையும் நீதிபதி ரவிசந்திர பாபுதான் விசாரிக்கவுள்ளார்.

பதிவாளர் அறிவிப்பு
நீதிபதி சி.டி.செல்வம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிப்பார். நீதிபதி கிருபாகரன் கல்வி தொடர்பான வழக்குகளை விசாரிப்பார் என்றும் உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications