சரியும் தினகரன் கோட்டை.. எம்பி வசந்தி முருகேசன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு
தினகரன் ஆதரவாளராக இருந்த தென்காசி எம்பி வசந்தி முருகேசன் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: தினகரனின் ஆதரவாளர் எம்பி வசந்தி முருகேசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்களும் எம்பிக்களும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் அண்மையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்பியான வசந்தி முருகேசன் தினகரன் அணியிலிருந்து விலகி முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முதல்வர் பழனிசாமியை வசந்தி முருகேசன் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்.பி.,க்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்தே அவரது ஆதரவு எம்குழப்பமான மன நிலையில் உள்ளனர். ஏற்கனவே தொகுதியிலும் மக்கள் ஆதரவு இல்லாமல் போய்விட்டது.
இதனால் தினகரன் ஆதரவு எம்பிக்களும் எம்எல்ஏக்களும் மதில் மேல் பூனையாக இருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் எம்எல்ஏ ஐக்கையன் தினகரன் அணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அணிக்கு சென்றார். இந்நிலையில் எம்பி வசந்தி முருகேசனும் எடப்பாடி அணிக்கு சென்றிருப்பது தினகரன் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.