திருச்சியில் மோதிக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தினகரன் கோஷ்டிகள்- வீடியோ
திருச்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் வெல்லமண்டி ராஜேந்திரன், வளர்மதி, குமார் எம்.பி ஆகியோரை தினகரன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டது பரபரப்பை கிளப்பியது.
திருச்சி: திருச்சியில் அரசு விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரின் காரை தினகரன் ஆதரவாளர்கள் மறித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வந்திருந்தனர். அப்போது தினகரன் ஆதரவாளரான ராஜராஜன் தலைமையில் சிலர் அமைச்சரின் காரை வழிமறித்தனர்.
மேலும் அமைச்சரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் 'அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனை நீக்குவதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். திருச்சி மாவட்ட செயலாளர், அமைச்சர் என்ற பொறுப்புகளிலிருந்து அந்த முடிவை நீங்கள் எடுத்தீர்கள். அதேபோல், மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவியிலிருந்து நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்' என எழுதப்பட்டிருந்தது.
இதைப் படித்த அமைச்சர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தினகரன் ஆதரவாளரான ராஜராஜன் கோஷ்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி, ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். அதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.
ஒருவர் மேல் ஒருவர் கற்களை வீசித் தாக்கிக்கொண்டதால் அந்த இடமே பரபரப்பானது. இந்த தாக்குதல் சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.