போயஸ்கார்டனில் டிடிவி ஆதரவாளர்கள் போராட்டம்.. தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.. கைது!
வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போயஸ்கார்டனில் போராட்டம் நடத்திய டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போயஸ்கார்டனில் போராட்டம் நடத்திய டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது ஆதரவாளர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா வாழ்ந்த போஸ்கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பீதியடைந்துள்ள சசிகலா குடும்பத்தினர் அங்கு குவிந்துள்ளனர்.
மேலும் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தினகரனின் ஆதரவாளர்கள் போயஸ் கார்டனில் குவிந்தனர். அப்போது பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள் பாஜக என எழுதப்பட்ட பதாகையை செருப்பால் அடித்தனர்.
மேலும் பிரதமர் மோடியை ஆபாச வார்த்தைகளாலும் அர்ச்சித்தனர். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா வீட்டின் முன்பு அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆதரவாளர் ஒருவர் திடீரென தம்மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமை விஸ்வரூபம் எடுப்பதை அறிந்த போலீசார் போராட்டம் நடத்திய தினகரனின் ஆதரவாளர்களை கைது செய்தனர். மேலும் போயஸ் கார்டன் பகுதியில் ஏராளமான போலீசார் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.