டைம் முடிஞ்சு போச்சு.. மாநிலம் முழுவதும் சுற்றப் போகிறேன்.. தினகரன் அதிரடி!
தான் கொடுத்த காலக் கெடுவில் இரு அணிகளும் இணையவில்லை. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைய வரும் 5ம் தேதி வரை டிடிவி தினகரன் கெடு விதித்திருந்தார். ஆனால் இந்த இரண்டு அணிகளும் இணைவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் தினகரன் பேசியதாவது:
இரு அணிகளும் இணைய 5ம் தேதி வரை கெடு விதித்தேன். அவர்கள் இன்னும் இணையவில்லை. இந்நிலையில், வரும் 4ம் தேதி அதிரடியாக எனது முடிவுகளை அறிவிக்க உள்ளேன்.இதனைத் தொடர்ந்து 5ம் தேதி என்னுடைய திட்டங்களை என்னென்ன என்பதைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
மேலும், தமிழகத்தில் அதிமுகவை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்காகத் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று தினகரன் கூறினார்.