டே... இதென்னடா தினுசான திருட்டா இருக்கு... வடிவேலு படக் காட்சிகளை மிஞ்சும் திண்டுக்கல் கேடிகள்!
திண்டுக்கல் நூதன திருட்டு மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளை அதிரவைக்கின்றனர் திருடர்கள்.
திண்டுக்கல்: திரைப்படங்களில்தான் தினுசு தினுசாக திருடுதல் தொடர்பான காட்சிகள் இடம்பெறுமா? நடிகர் வடிவேலு சொல்வதைப் போல நம்மைச் சுற்றி நடப்பவதைதான் திரைப்படமாகின்றன என்பதை நிரூபித்திருக்கின்றனர் திண்டுக்கல் கில்லாடிகள்.
திண்டுக்கல்- திருச்சி நெடுஞ்சாலையில் வடமதுரை அருகே அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவில் மக்களின் பெரும் நம்பிக்கைக்குரியது. வாகனங்களில் செல்வோர் வீசிவிட்டு போகும் காசை எடுப்பதற்கான குத்தகைக்கே வெட்டு குத்து நடக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
ரசீது புத்தகத்துடன்
இந்த வண்டி கருப்பண சாமி கோவிலை முன்வைத்துதான் அப்பகுதியில் அடேங்கப்பா ஆடு திருடுதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கொஞ்சம் செழிப்பான விவசாயிகள் வீட்டு ரசீது புத்தகத்துடன் வண்டிகளில் போய் இறங்கும் ஒரு கும்பல்.
ஆட்டுக்கும் பேரம்
வண்டி கருப்பண சாமி கோவிலில் பூஜை வெச்சிருக்கோம்.. நன்கொடை கொடுங்க என கேட்டு பேச்சு கொடுக்கும் இந்த கும்பல்.. சாமி மீது நம்பிக்கை கொண்ட விவசாயிகளும் நன்கொடை தந்து உதவுவர்.. அப்படியே பேசிக் கொண்டிருக்கும்போதே சாமிக்கு நேர்ந்துவிட உங்ககிட்ட இருக்கு ஆடு ஒன்னு கொடுங்க.. பேசிக்கலாம் என ரேட் பேச தொடங்கும்.
ஆட்டைய போடுதல்
அப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே திருநீறுடன் மயக்க பொடியை கலந்து முகத்தில் வீசிவிடும் அக்கும்பல். அப்புறம் என்ன.. இருசக்கர வாகனத்தில் ஆட்டை ஆட்டைய போட்டுவிட்டு எஸ்கேப்பாகிவிடுவார்கள்.. அப்படி ஆட்டை பறிகொடுத்தவர்கள் போலீசில் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
டின் கட்டி அனுப்பினர்
இதே வேலையாக அலைந்து கொண்டிருக்கும் கும்பல் வடமதுரை பகுதியில் நடமாடுவதாக தகவல் தெரிய ‘ஊரே கூடியது..' களவாணிகளை கையும் களவுமாக பிடித்து நாலு காட்டி காட்டி போலீசிடம் ஒப்படைத்திருக்கிறது.
ஆமா இதென்னடா தினுசான திருட்டா இருக்கு....அவ்வ்வ்வ்!