பொய்யான விளம்பரங்களை செய்கிறார் எடப்பாடியார்.. தடுமாறி உளறிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: 7.5% இட ஒதுக்கீட்டை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று ஈபிஎஸ் பொய் கூறி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாய் தவறிப் உளறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல்லில் இன்று கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், 7.5% இட ஒதுக்கீட்டை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று ரப்பர் ஸ்டாம்ப் ஒட்டுவது போல எடப்பாடியார் பொய் கூறி வருகிறார் எனத் தெரிவித்தார்.

முதலில் 7.5% இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி தான் கொண்டு வந்ததாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பின்னர், எடப்பாடியார் பொய்யான விளம்பரங்களைச் செய்கிறார் எனப் பேசினார். திண்டுக்கல் சீனிவாசன் வாய் தவறி இப்படி தடுமாற்றமாகப் பேசியதால் அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சு அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திண்டுக்கல் சீனிவாசன், "ஜெயலலிதா இருக்கும் வரை தனித்துப் போட்டியிடுவோம் என கூறினார். ஆனால் தற்பொழுது எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளார். மேலும் வரக்கூடிய கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம் எனக் கூறுகிறார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் சூழ்நிலை மாறும். ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக தனித்து நின்றால் அதிமுக தனித்துப் போட்டியிட தயார். ஆனால் சூழ்நிலைகள் மாறுபடுகிறது. அந்தப் பக்கமும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். திமுக ஆட்சி வரக்கூடாது என சொல்கின்ற அத்தனை கட்சிகளும் அதிமுகவுடன் சேரவேண்டும். இது காலத்தின் கட்டாயம். அரசியலில் எதுவும் செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications