துணை பொதுச் செயலாளரானபோது தினகரன் என் காலிலும் விழுந்தாரே... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக துணை பொதுச் செயலாளராக பதவியேற்றவுடன் டிடிவி தினகரன் எனது காலிலும், அமைச்சர் செங்கோட்டையன் காலிலும் விழுந்தார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
கடலூர்: ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து பிரிந்து தனியாக செயல்படத் தொடங்கியதும் பொருளாளர் பதவி எனக்கு அளிக்கப்பட்டபோது சசிகலா காலில் மரியாதை நிமித்தமாகத்தான் விழுந்தேன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சின்னம்மா என்று அழைத்து வந்த நிலையில் தற்போது சசிகலா என்றாகிவிட்டது என்று சென்னை திருவல்லிக்கேணியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், பெசன்ட் நகரில் தனது வீட்டில் பத்திரிகையாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், திண்டுக்கல் சீனிவாசன் பேசுவதற்கு முன்னர் அவருக்கு பொருளாளர் பதவி, அமைச்சர் பதவியை யார் கொடுத்தது என்று எண்ணி பார்க்க வேண்டும். வேண்டுமென்றால் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் பேசட்டும்.
சசிகலா காலில் விழுந்தார் திண்டுக்கல் சீனிவாசன். இன்று இத்தனை பேச்சு பேசுகிறார். அவர் காலில் விழுந்த புகைப்படங்கள் வெளியிட்டால் அவருக்குத்தான் அசிங்கம் என்றார் டிடிவி தினகரன்.
இந்நிலையில் கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதை நிமித்தமாக சசிகலா காலில் விழுந்தேன். துணை பொதுச் செயலாளரானபோது எனது காலிலும், செங்கோட்டையன் காலிலும் தினகரன் விழுந்தார். மத்திய அரசு கூறுவதை மாநில அரசு கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார்.