ஓ.பி.எஸ் அணியுடன் 'வாயில்தான்' பேசுகிறோம்.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஷாக் பேட்டி
சென்னை: ஓ.பி.எஸ் அணியுடன் பேச்சுவார்த்தை எப்படி நடைபெறுகிறது என்கிற செய்தியாளரின் கேள்விக்கு வாயில் தான் பேசுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடுவே பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்கள் பல கடந்தும்கூட, பேச்சுவார்த்தை நடப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில், செய்தியாளர்கள் இன்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டனர். ஓ.பி.எஸ் அணியுடன் பேச்சுவார்த்தை எப்படி நடைபெறுகிறது என்கிற செய்தியாளரின் கேள்விக்கு "வாயின் மூலம்தான் தம்பி" என பதிலளித்தார் சீனிவாசன். அவர் இவ்வாறு கூறும்போது முகம் சாதாரணமாகத்தான் இருந்தது. சிரிக்க கூட இல்லை. ஒருவேளை இந்த பதிலை அவர் கேலியாக சொல்லாமல், உண்மையிலேயே சீரியசாகவே சொல்லிவிட்டார் போலும் என நிருபர்கள் சிரித்துக்கொண்டனர்.
மேலும் அவர் கூறுகையில், அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து நீதிமன்றம் மட்டுமே பதில்சொல்லும். யார் மீது புகார் தெரிவித்தாலும் சந்திக்க வேண்டியது அவரவர் கடமை. இரு அணிகள் பேச்சுவார்த்தை குறித்து வெளியில் தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.