ஐபிஎல் எதிர்ப்பு: சென்னை அண்ணாசாலையில் இன்று மாலை 5 மணிக்கு புரட்சி பயணம்: பாரதிராஜா
ஐபிஎல் போட்டிக்கு எதிராக இன்று மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து புரட்சிப் பயணம் தொடங்கும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : ஐபிஎல் போட்டிக்கு எதிராக இன்று மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து புரட்சிப் பயணம் தொடங்கும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கட்சி பாகுபாடின்றி பங்கேற்க அரசியல் தலைவர்களுக்கு விடுத்த அழைப்பை ஏற்று அவர்களும் தொண்டர்களை அனுப்பி வைக்க ஒப்புகொண்டுள்ளதாக பாரதிராஜா கூறியுள்ளார்.
தமிழர் கலை பண்பாட்டு இலக்கியப் பேரவையினர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது : கிரிக்கெட் வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள் என்று தான் சொன்னோம். எங்களின் இளைஞர்களை மழுங்கடித்துவிடாதீர்கள். இப்போது தான் இன உணர்வோடு ஒன்று சேர்ந்திருக்கிறோம் அதை அழித்துவிடாதீர்கள் என்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம் அது நடக்கவில்லை.
இருந்த போதும் தமிழ், எங்கள் மண், விவசாய மக்களுக்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். விவசாயிகளுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் நீதிமன்றத்தின் மூலம் மே மாதம் வரை அவகாசம் கிடைத்துள்ளது, இதை மேலும் ஒரு வழக்கு போட்டு ஜுன் மாதத்திற்கு தள்ளிப்போடலாம், ஆனால் அதற்குள் இங்கு விவசாயியும், விவசாயமும் மாண்டு போய்விடும்.
ஒரே நாடு என்று தேசியம் பேசும் போது அண்டை மாநிலத்திடம் இருந்து தண்ணீர் வாங்கித் தர முடியவில்லையா. தமிழர்களுக்கு இன்று தான் தங்களின் உரிமைக்காக ஒற்றுமை கிடைத்துள்ளது. எல்லா அமைப்பினரிடும் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம், எந்தக் கட்சிக் கொடியும் இல்லாமல் எல்லா அமைப்பினரும் ஒன்றாக வந்து போராடுவோம் என்று கூறி இருக்கிறார்கள்.
இன்று மாலை 5 மணியளவில் அண்ணா சிலையில் இருந்து ஒருங்கிணைந்து அங்கிருந்து எங்களின் புரட்சிப் பயணம் தொடங்கும். எப்படி இந்த போராட்டம் நடக்கப் போகிறது என்பதை அங்கு வைத்து அறிவிப்போம். ஐபிஎல்லுக்கு எதிராக முதலில் எங்களின் போராட்டம் பின்னர் படிப்படியாக போராட்டங்கள் நடைபெறும்.
முதல்வரை சந்தித்த போது ஐபிஎல் போட்டியை நிறுத்த முடியாதா என்றேன் அது எங்கள் வரையறைக்குள் இல்லை என்று கூறிவிட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டியாவது ஐபிஎல் போட்டியை தடுத்திருக்கலாம். அறவழியில் போராட வேண்டாம் என்றால் எந்த வழியிலும் வருவோம். தன்மானத்தை காட்டிலும் உயிர் பெரிதில்லை என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.