ஜல்லிக்கட்டு தடையை உடைக்க நீங்கள் என்ன செய்தீர்கள்..நெட்டிசன்களுக்கு போட்டோ போட்டு மோகன் ஜி பதிலடி!
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடையை உடைக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என இயக்குநர் மோகன்ஜியிடம் கேட்டதற்கு அவர் ஆதாரத்துடன் பதில் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும் விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி இறுதி விசாரணை நிறைவடைந்ததால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி நடந்த இந்த வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. அதில் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்றும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் தமிழக அரசின் சட்டம் செல்லும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தில் எந்த தவறுமில்லை, தமிழ்நாடு அரசின் சட்டம் திருப்தியளிக்கிறது. ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தாமல் இருப்பதை ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். இந்த தீர்ப்பு கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் செல்லும் என கூறிய பாரம்பரிய விளையாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பை தமிழர்கள் மட்டும் அல்லாமல் கன்னடர்கள் மகாராஷ்டிராக்காரர்களும் வரவேற்றனர். கர்நாடகாவில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் கம்பாலா போட்டிக்கும் தடையை நீக்கி இருக்கிறது. உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக மக்கள் மட்டுமல்லாது பல திரையுலகத்தினரும் வரவேற்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இப்படி ஒரு நிலையில் ஜல்லிக்கட்டு தடை நீக்க தீர்ப்பை வரவேற்கும் விதமாக இயக்குனர் மோகன் ஜியும் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் 'இந்த ஜல்லிக்கட்டு தடையை உடைக்க ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி.. சிறப்பான தீர்ப்பு' என்று பதிவிட்டு இருந்தார். இவரின் இந்த பதிவை பார்த்த பலர் உனக்கும் ஜல்லிக்கட்டுக்கு என்ன சம்மந்தம் என்று கேலி செய்து வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மோகன். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications