கோவை கல்லூரி மாணவி பலி வழக்கு.. 2 தனிப்படைகள் அமைத்தது காவல்துறை.. பயிற்சியாளருக்கு ஸ்கெட்ச்
Recommended Video
கோவை: கோவையில் பேரிடர் பயிற்சியின்போது பரிதாபமாக மாணவி லோகேஸ்வரி பலியான சம்பவம் குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகேயுள்ள நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்த நல்லாகவுண்டர், மகள் லோகேஸ்வரி (19). இவர் நரசிபுரம் பகுதியில் உள்ள கலைமகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு பிபிஏ பயின்று வந்த நிலையில், நேற்று கல்லூரியில் நடத்தப்பட்ட பேரிடர் மீட்பு ஒத்திகையின்போது எதிர்பாராமல் பலியானார்.
2வது மாடியில் இருந்து அவரை கீழே குதிக்க பயிற்சியாளர் கூறியதோடு யோசித்துக்கொண்டிருந்த லோகேஸ்வரியை பிடித்து கீழே தள்ளியும் விட்டார். இதில், கழுத்து பகுதியில், கட்டிடத்தின், சன் ஷேட் எனப்படும் பகுதி இடித்ததில் படுகாயமடைந்த லோகேஸ்வரி அதே இடத்தில் பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பேரூர் டிஎஸ்பி வேல்முருகன் தெரிவித்தார்.
பேரூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், மனோகரன் மற்றும் ஆலந்துறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள், பயிற்சியாளர் மனோகரின் பின்னணி, அவரது கல்வி தகுதி உள்ளிட்டவை குறித்தும், பிற விவகாரங்கள் பற்றியும் விசாரணை நடத்த உள்ளனர்.