குழந்தை திருமணமானாலும் விவாகரத்து கட்டாயம்: சென்னை ஹைகோர்ட்
மதுரை: குழந்தை திருமணமாக இருந்தபோதிலும், விவாகரத்து பெறாவிட்டால் அந்த திருமணம் செல்லுபடியாகும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், நெல்லை குடும்ப நல நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்து, தனக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், அப்போது, தனக்கு திருமண வயதாகவில்லை எனவும் தெரிவித்து, அந்த திருமணத்திற்காக விவாகரத்து கோரியிருந்தார்.

இவ்வழக்கை நெல்லை கோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், மதுரையிலுள்ள ஹைகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார் அந்த பெண். இந்த மனுவை நீதிபதிகள் மணிகுமார் மற்றும் செல்வம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், விசாரித்தது.
விசாரணை முடிவில் நீதிபதிகள் கூறியது: இந்து திருமண சட்டம் 1955ன்கீழ், ஆண் மற்றும் பெண்ணுக்கான திருமண வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெண்களுக்கான குறைந்தபட்ச, திருமண வயது 18, ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21. அதேநேரம், ஒரு குழந்தை திருமணம் எப்போதெல்லாம் ரத்து செய்யப்படலாம் என்ற பிரிவின்கீழ், குழந்தை திருமணம் பற்றிய குறிப்பு இல்லை.
இந்த சிக்கலை, நாடாளுமன்றம் கருத்தில் கொண்டு, சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவரும் என்று கோர்ட் எதிர்பார்க்கிறது. எனவே, குழந்தை திருமணத்திற்கும் விவாகரத்து கட்டாயம். அல்லது, சம்மந்தப்பட்ட நபர்களுக்கு திருமண வயது வந்ததும், சட்டப்படி அந்த திருமணம் அங்கீகாரம் பெற்றதாகிவிடும்.
திருமண வயதையடைந்து 2 வருடத்திற்குள் விவாகரத்துக்கு சம்மந்தப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மனுதாரரை, நெல்லை கோர்ட்டை அணுக நீதிமன்ற அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications