தி.நகரில் குவியுதப்பா தீபாவளிக் கூட்டம்.. நிற்க இடமில்லை!
சென்னை: தீபாவளி வேகமாக நெருங்கி வருகிறது.. பர்ச்சேஸ் செய்யும் கூட்டம் கோலாகலமாக குவிந்து வருவதால் சென்னையின் தி.நகர் நெரிசலில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. எள் விழுந்தால் எண்ணெயெல்லாம் வராது.. மாறாக எள் எங்கே என்று தேட வேண்டியிருக்கும்.. அப்படி ஒரு கூட்டம்.
பல ஆயிரம் மக்கள் குவிந்து வருவதால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர். அப்படியும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.
தி.நகரின் முக்கியப் பகுதிகளான ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை என எங்கு பார்த்தாலும் ஜனக் கூட்டமாக காணப்படுகிறது.

எல்லாப் பொருளும் இவ்விடம் கிடைக்கும்
தி.நகரில் இந்தப் பொருள்தான் என்றில்லை.. எல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கி விடலாம் என்பதால்தான் மக்கள் காலம் காலமாக தி.நகரை மொய்த்து வருகிறார்கள்.

ஜட்டி முதல் சட்டி வரை
ஜவுளிக்கடைகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை. அதை விட முக்கியமாக ஜட்டி முதல் குண்டாச் சட்டி வரை அத்தனை பொருட்களையும் இங்கு மொத்தமாக வாங்கி விடலாம்.

ரயில்- பஸ் வசதி
மேலும் தி.நகரில் உள்ள அத்தனை இடங்களுக்கும் எளிதாக வந்து போக வசதியாக ரயில் வசதி உள்ளது. பஸ்களுக்கும் பஞ்சமில்லை. இப்படி ஏகப்பட்ட வசதிகள் இருப்பதால்தான் தி.நகரை அத்தனை பேரும் மொய்க்கிறார்கள்.

ரெடிமேடுகளின் சொர்க்கம்
இங்கு ரெடிமேட் கடைகள் நிறைய. அத்தனை வயதினருக்கும் ஏற்ற ஆடைகள் உள்ளிட்ட அத்தனையையும் இங்கு வாங்கி விடலாம் என்பதாலும் கூட்டம் அலைமோதுகிறது.

நகைகளுக்கும் நல்ல கடைகள் நிறைய..
ஜவுளிக்கு அடுத்து நகைக் கடைகள் இங்கு நிறைய. எனவே நகை வாங்க வருவோரும் தி.நகரில்தான் முதலில் குதிக்கின்றனர். இதனாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.

தீபாவளி நெருங்க நெருங்க
தற்போது தீபாவளி நெருங்கி வருவதால் பர்ச்சேஸ் செய்வோரின் கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறை நாட்களில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றால், மற்ற நாட்களிலும் கூட கூட்டம் பயங்கரமாக இருக்கிறது. இதனால் வியாபாரத் தலங்களில் வர்த்தகத்திற்குக் குறைவில்லை.

மழையையும் பொருட்படுத்தாமல்
இன்று சென்னையில் காலையில் லேசான மழை பெய்தபடி இருந்தபோதும் கூட கூட்டம் கட்டுக்கடங்கவில்லை. குடையும் கையுமாக, பையும் கையுமாக மக்கள் கடைகளுக்குப் படையெடுத்து வந்ததைக் காண முடிந்தது.

பாதுகாப்புக்கு ஏற்பாடு
கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட்காரர்கள் கைவரிசை உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்க போலீஸார் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். கண்காணிப்புகோபுரமும் அமைத்துள்ளனர். மைக்கில் அவ்வப்போது திருடர்கள் ஜாக்கிரதை என்று எச்சரித்த் வண்ணம் உள்ளனர். போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்துகிறார்கள்.

புரசைவாக்கத்திலும்
தி. நகரைப் போல தற்போது புரசைவாக்கத்திலும் பெரிய ஜவுளிக்கடைகள் உள்ளன. வடசென்னை மக்கள் பெரும்பாலோனோர் இப்போது புரசைவாக்கம் ஜவுளிக்கடைகளில்தான் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு உடைகள் வாங்குகின்றனர். இதனால் இங்கும் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான போலீசார் இங்கும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வண்ணாரப்பேட்டையிலும்
அதேபோல பழைய வண்ணாரப்பேட்டையிலும் கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. தி.நகர் போக விரும்பாதவர்கள் இங்குதான் வருகிறார்கள். நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு வருபவர்கள் அதிகம். இங்கும் ஜவுளிக்கடைகள் எக்கச்சக்கம். இங்கும் தற்போது தீபாவளிக் கூட்டம் அலைமோதியபடி இருக்கிறது.












Click it and Unblock the Notifications