தீபாவளி சிறப்பு ரயில்: டிக்கெட் கிடைக்காமல் ஏமாந்த மக்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டுகள் 15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததால், பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
தீபாவளிப் பண்டிகையை சொந்த ஊரில் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பது அனைவரின் கனவு. இதற்காக 60 நாட்களுக்கு முன்பிருந்தே ரயில்களில் முன்பதிவு செய்து காத்திருப்பார்கள்.
அந்த ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் சிறப்பு ரயில்கள் எப்போது அறிவிக்கப்படும் என்று காத்திருந்தனர். இந்த நிலையில் கோவை, நெல்லை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நேற்று அறிவித்தது.

இந்த சிறப்பு ரயில்கள் வரும் 31-ஆம் தேதி முதல் நவம்பர் 4-ஆம் தேதி வரை இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இதற்காக அதிகாலை முதலே பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். ஆனால் முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் அனைத்து பயணச் சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
ஆன் - லைனில் பயணச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதால், ரயில் நிலையங்களில் நேரில் பதிவு செய்ய வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?
பேருந்தில் செல்வதை விட ரயிலில் செல்வதுதான் பயணக்கட்டணமும் மிச்சம், வசதியும் கூட எனவேதான் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications