ஸ்டெர்லைட் போராட்டத்தில் செய்தியாளர்கள் மீது தேமுதிகவினர் தாக்குதல்- பிரேமலதா மீது வழக்கு பதிவு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தேமுதிகவினர் தாக்கியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
துாத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலையை எதிர்த்து குமரெட்டையாபுரம் மக்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரடியாக வந்து தங்கள்ஆதரவை தெரிவித்தனர். அவ்வகையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, அவரது சகோதரர் சுதீஷ் ஆகியோர் குமரெட்டையாபுரம் வந்து அங்கு கிராம மக்களை சந்தித்து பேசினர்.
போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா, குமரெட்டியாபுரம் போராட்டத்தை தங்களது தொலைக்காட்சி மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாக கூறினார். தாம்இங்கு வந்திருப்பதால் மட்டுமே ஊடகங்கள் வந்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதனால் அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அங்கிருந்த தேமுதிகவினர் செய்தியாளர்களை திடீரென தாக்க தொடங்கினார்கள். இதில் 3 செய்தியாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். மேலும் செய்தியாளர்கள் செல்போன்கள், கேமரா ஆகியவையும் உடைபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் சிப்காட் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் மற்றும் தேமுதிக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.