தேமுதிக - பாஜக இடையே தொடர்ந்து இழுபறி- ராஜ்நாத் சிங் சென்னை வருகை ஒத்திவைப்பு?
சென்னை: தேமுதிக -பாஜக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் பாஜக தனது கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் தமிழக வருகையும் கூட ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பாஜக கூட்டணியில் தேமுதிகவால் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. இத்தனை தொகுதிகள் வேண்டும், இந்த தொகுதிகள்தான் வேண்டும் என்று தேமுதிக பிடிவாதமாக உள்ளது. அதே தொகுதிகளை பாமகவும், மதிமுகவும் கேட்பதால் சிக்கலாகியுள்ளது.
இந்தச் சிக்கலைத் தீர்க்க பாஜக கடுமையாக முயன்றும் கூட இதுவரை தீர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை.
10-க்கும் மேற்பட்ட தடவை நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு தேமுதிக, பாமக இரு கட்சிகளும் சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன் வந்தன. இதையடுத்து தேமுதிக தலைவர்கள் தங்களது 14 தொகுதிகளின் மாற்று பட்டியலைக் கொடுத்தன. என்றாலும் அதிலும் சுமூக முடிவை எட்ட முடியவில்லை.
குறிப்பிட்ட சில தொகுதிகளை தேமுதிக, பாமக இரு கட்சிகளும் விடாப்பிடியாக கேட்டு வருகின்றன. ஆரணி அல்லது அரக்கோணம், மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி இந்த மூன்றில் ஒன்று என 2 தொகுதிகளை தேமுதிக தரப்பில் கேட்டு வலியுறுத்தப்பட்டது. ஆனால் பாமக இந்த தொகுதிகளில் எதையும் விட்டுத் தர இயலாது என்று கூறி வருகிறது.
தென் மாவட்டங்களில் தென்காசி அல்லது தூத்துக்குடி வேண்டும் என்று தே.மு.தி.க. கேட்கிறது. ஆனால் தூத்துக்குடியில் மதிமுகவும் தென்காசியில் பாஜகவும் போட்டியிட தீவிரமாக உள்ளன.
இதன் மூலம் வடமாவட்டங்களில் 2 தொகுதிகளிலும், தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் மட்டுமே சிக்கல் நீடிக்கிறது. மற்றபடி இதர 36 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த முடிவு ஏற்பட்டு விட்டதாகத் தெரிகிறது.
சுமார் ஒரு வாரமாக இடைவிடாமல் நடந்து வந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு பா.ஜ.க. நிர்வாகிகள் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமையகத்துக்கு சென்று பேசினார்கள். இதன் தொடர்ச்சியாக தி.நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இன்றும் பேச்சு வார்த்தை நீடித்தது.
இன்று தே.மு.தி.க., பா.ம.க., ஐ.ஜே.கே., கொங்குநாடு நிர்வாகிகள் வந்து பேசினார்கள். இன்று மதியம் நிலவரப்படி தே.மு.தி.க.வின் 14 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிகிறது.
இன்றைய பேச்சுக்குப் பின்னர் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லை. இன்றைக்குள் முடியும் என்று தெரிகிறது என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் சென்னை வருகையும் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.