மக்களுக்காக நாங்கள் மட்டுமே குரல் கொடுக்கிறோம்... தேமுதிக
நெல்லை: மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பது தேமுதிக மட்டுமே என்று தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.
தேமுதிக ஆரம்பித்து 10 ஆண்டுகளாகி விட்டன. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் பார்த்தசாரதி கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்துப் பேசினார். தருவை பேருந்து நிலையப் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கினார். தொடர்ந்து மக்கள் பிரச்னைக்காக தேமுதிக குரல் கொடுத்து வருகிறது.
2011ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பிரதான எதிர்கட்சியாக தேமுதிக உருவெடுத்தது. தமிழகத்தில் ஆளுகின்ற அதிமுக அரசு மக்கள் பணி செய்ய தவறிவிட்டது. மக்களை பிரச்சனைகளை தீர்க்க எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக தேமுதிகவினர் போராட வேண்டும்.
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. ஆளும்கட்சியினர் எதிர்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைத்துள்ளனர்.
காஷ்மீர் வெள்ள நிவாரணமாக கட்சி சார்பில் தலைவர் விஜயகாந்த் ரூ. 10 லட்சம் வழங்கி உள்ளார். தேமுதிக எம்.எல்.ஏ. க்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்கு வழங்கி உள்ளனர்.
கட்சியின் 10 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருநெல்வேலி மாநகர், புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் சார்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு்ள்ளது என்றார் பார்த்தசாரதி.












Click it and Unblock the Notifications