ஏ புள்ள அந்த ரசத்த ஊத்து.. ரோட்டோரம் காரை நிறுத்தி ருசித்து சாப்பிட்ட விஜயகாந்த்!
சாலையோரத்தில் காரை நிறுத்தி மனைவி பிரேமலதா பரிமாறிய சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
ஈரோடு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிகவும் சிம்பிளான ஒரு அரசியல்வாதி. கடலூரில் 2015 டிசம்பரில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில், சேறு, சகதி பார்க்காமல் விசிட் அடித்தார் விஜயகாந்த்.
அதேபோல சென்னையிலும், படகில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கினார். இப்படிப்பட்ட விஜயகாந்த் கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்து ஒரு சீட் கூட வெல்ல முடியாமல் போனது. விஜயகாந்த்தே தோல்வியைத்தான் தழுவினார்.
"சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்துவிட்டார்.." என்று தேமுதிக தொண்டர்கள் மனதுக்குள் பாடி வருகிறார்கள். தேர்தல் தோல்வியோ வெற்றியோ விஜயகாந்த்தை மாற்றவேயில்லை. மனிதர், அப்படியேதான் உள்ளார்.

ஆர்ப்பாட்டம்
அதற்கு ஒரு உதாரணம், தற்போது நடந்துள்ளது. விஜயகாந்த் இன்று அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார்.

காரை நிறுத்தினார்
நிகழ்ச்சி முடிந்ததும் சென்னிமலை வழியாக மதுரைக்கு அவர் காரில் வந்து கொண்டிருந்தார். நிர்வாகிகள் சிலரும் கூட, காரில் வந்து கொண்டிருந்தனர். மதியம் 2.30 மணி அளவில் சென்னிமலை அடுத்த நொய்யல் ஆற்றின் கரையோரம் விஜயகாந்த் கார் சென்றபோது, பசி வயிற்றை கிள்ளவே, ரோட்டோரம் காரை நிறுத்த சொல்லியுள்ளார் விஜயகாந்த்.

சாப்பாடு
ரோட்டோரம் இருந்த தென்னை மர நிழலில் ஒரு வீட்டின் முன் விஜயகாந்த்தும் அவரும் மனைவி பிரேமலதா மற்றும் அவர்களுடன் வந்தவர்களும் நின்று கொண்டு மதிய உணவு சாப்பிட தொடங்கினார். தலையில் விஜயகாந்த் முண்டாசு கட்டி கொண்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டு பாக்கு மட்டை தட்டில் எடுத்து பரிமாறப்பட்ட உணவை, வாழை இலையில் போட்டு சாப்பிட்டார்.

கார் மீது இலைபோட்டு
வாழை இலையும் கூட காரின் முன்பக்கமான போன்னட் (bonnet) மீது விரிக்கப்பட்டு அதன் மீது சாப்பாடு பரிமாறப்பட்டது.
ஆனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு சாப்பிடுவது விஜயகாந்த் என அடையாளம் தெரியவில்லை. யாரோ சுற்றுலா பயணிகள் என நினைத்து கடந்துள்ளனர்.

விவசாயிக்கு உதவி
இதனிடையே சென்னிமலை சென்றிருந்த, அந்த ரோட்டோர வீட்டுக்கு சொந்தக்காரரான விவசாயி முருகேஷ் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் அப்போது வீட்டுக்கு திரும்பியுள்ளனர். வந்தவர்கள் விஜயகாந்த்தையும் அவர் மனைவியையும் அடையாளம் கண்டுபிடித்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை வீட்டுக்குள் வரும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அன்பு வேண்டுகோளை ஏற்ற விஜயகாந்த், பிரேமலதா இருவரும் அவர்கள் வீட்டுக்குள் சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். விவசாயியான முருகேஷின் கஷ்ட நிலையை கேட்டறிந்த விஜயகாந்த் பொருளுதவி செய்துவிட்டு பிறகு அலங்காநல்லூர் கிளம்பினாராம்.

சிம்பிளிசிட்டி
கவுன்சிலர்களே ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவதை விரும்பும் இந்த காலத்தில், பிரபல நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், கட்சி தலைவருமான விஜயகாந்த் சிம்பிளாக நடந்து கொண்ட விதம் குறித்து அக்கிராமத்து மக்கள் ஆச்சரியமாக பேசி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications