ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தேமுதிக கவுன்சிலர் கைது
விழுப்புரம்: ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தேமுதிக கவுன்சிலர் சுதாகர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு(45). அவரது மனைவி பழனியம்மாள்(36). 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சேட்டு தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சேட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மணலூர்பேட்டையில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கு வைத்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சேட்டு குழந்தைகளை மட்டும் அழைத்துக் கொண்டு சென்னை சென்றுவிட்டார்.
இந்நிலையில் அம்மா வீட்டில் இருந்த பழனியம்மாளுக்கும் மணலூர்பேட்டையைச் சேர்ந்த தேமுதிக கவுன்சிலர் சுதாகருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு சுதாகர் பழனியம்மாளின் வீட்டுக்கு சென்று தனது ஆசைக்கு இணங்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் பழனியம்மாள் மறுக்கவே வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து அவரின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு சுதாகர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
உடலில் தீப்பிடித்தவுடன் பழனியம்மாள் அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த மணலூர்பேட்டை போலீசார் சுதாகரை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications