அவைத்தலைவர் பதவியே இனி இல்லை: செயற்குழு முடிவால் தேமுதிகவில் பெரும் குழப்பம்!!
சென்னை: தேமுதிகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் விலகியுள்ள நிலையில் அந்தக் கட்சியில் அவைத்தலைவர் என்ற பதவியே முற்றிலுமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் அவசரச் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அக் கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
சட்டசபை எதிர்க்கட்சித் துணைத்தலைவராகவும், தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினராகவும், கட்சி அவைத் தலைவராகவும் செயல்பட்டு வந்த பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் தாம் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டு, எழுத்துப்பூர்வமாக விஜயகாந்த்துக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அவைத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியதை செயற்குழு ஏகமனதாக ஏற்றுக் கொள்கிறது.
மேலும் தேமுதிகவில் அவைத் தலைவர் என்கிற பதவி இனி தேவையில்லை என்ற கருத்து செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அனைவராலும் வலியுறுத்தப்பட்டதன் காரணமாக, அந்தப் பதவி முற்றிலுமாக நீக்கப்படுவதை ஏகமனதாக அங்கீகரிக்கிறது.
தேமுதிகவின் பல்வேறு பதவிகளுக்கு புதியதாக நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கும், விடுவிப்பதற்கும், பதவிகளை மாற்றம் செய்வதற்கும் கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு செயற்குழு அதிகாரம் வழங்குகிறது.
இவ்வாறு தேமுதிக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
64 மாவட்ட அவைத் தலைவர்களும் நீக்கமா?
தேமுதிகவில் மொத்தம் 64 மாவட்டங்கள் உள்ளன. இதில் மாவட்ட அளவிலும் அவைத் தலைவர் பதவிகள் உள்ளன. தற்போதைய செயற்குழுவின் முடிவின்படி இந்த அவைத் தலைவர் பதவிகளும் நீக்கப்படுமா என்ற சந்தேகம் மாவட்ட நிர்வாகிகளுக்கு எழுந்துள்ளது.
இப்புதிய குழப்பத்தால் 64 மாவட்ட அவைத் தலைவர்களும் "தீர்மானமாக" ஒரு முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications