நாங்க தெளிவா இருக்கோம்... 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்.. தேமுதிக பொருளாளர்!
சென்னை: தேமுதிக 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் எந்த்க குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாகத்தான் உள்ளோம் என்று தேமுதிக பொருளாளர் என்.ஆர். இளங்கோவன் கூறியுள்ளார்.
கட்சியில் தற்போது வேட்பாளர் தேர்வு நடந்து வருவதாகவும், அடுத்த வார இறுதிக்குள் இது முடிவடையும் என்றும் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இளங்கோவன் கூறியுள்ளதாவது:
தனித்துப் போட்டி
தேமுதிக தனித்து போட்டியிடும் என்று தலைவர் விஜயகாந்த் கூறியது முதல் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் இளைஞரணி செயலாளர் சுதீஷ் தலைமையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம்.
அடுத்த வாரம்
இந்த பணி அடுத்த வாரம் இறுதிக்குள் முடியும். ஒவ்வொரு தொகுதிக்கு 5 முதல் 10 வரையிலான நபர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை தலைவர் விஜயகாந்திடம் கொடுக்க இருக்கிறோம். அவர் இறுதியாக யாரை தேர்ந்தெடுக்கிறாரோ? அவர் தான் வேட்பாளர்.
விஜயகாந்த் சொல்வதே இறுதி
சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்று தலைவர் விஜயகாந்த் அறிவிப்பதற்கு முன்பு, கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம், உயர் மட்டக்குழு ஆலோசனை கூட்டங்களில் கலந்தாலோசித்து தான் இதை தெரிவித்தார்.
மாற்றமில்லை
இனி எங்களுடைய கருத்துகளுக்கு எந்த இடமுமில்லை. தலைவர் விஜயகாந்த் எடுக்கக்கூடிய முடிவு தான் எங்களுடைய முடிவும். தலைவர் எந்த முடிவு எடுத்தாலும், அந்த பணியில் நாங்கள் ஈடுபடுவோம். ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை. அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடக்கவில்லை.
குழப்பமே இல்லை
எங்கள் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் அதிகம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். எங்கள் கட்சி தனித்து போட்டி என்ற அறிவிப்பு தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும். தனித்து போட்டியிடுவது எங்களுக்கு கவுரவம் அளிக்கிறது. மக்கள் மத்தியில் எங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்றார் அவர்.