பாஜக - அதிமுக கூட்டணியை உறுதி செய்யும் பிரேமலதா? இன்று தருமபுரியில் தேமுதிக பொதுக்குழு கூட்டம்!
தருமபுரி: தேமுதிக பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்குழுவில் தேமுதிக 2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இன்று நடைபெறுகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில் நடைபெறும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்கிறார்.

தேமுதிக பொதுக்குழு
இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் ஆகிய மாநில கட்சி செயலாளர்களும் பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த், 2011 முதல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரால் தொடர்ச்சியாக ஆக்டிவ் அரசியலில் ஈடுபட முடியவில்லை. இதனையடுத்து, கட்சிப் பணிகளை பொருளாளராக இருந்து பிரேமலதா விஜயகாந்த் மேற்கொண்டு வந்தார்.
மேலும், தேமுதிகவுக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் விதமாக விஜய பிரபாகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். விஜய பிரபாகரனை கட்சியின் அடுத்த முகமாக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானதை அடுத்து, பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சி இயங்கி வருகிறது.
விஜய பிரபாகரன்
கடந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். விஜய பிரபாகரனுக்கு கட்சியின் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை வழங்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஒருமுறை செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி அனைத்து மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசி விஜய பிரபாகரனுக்கு உரிய பதவி வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு
இந்நிலையில், அதன் பிறகு தற்போது தான் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. எனவே, இன்றைய பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி முடிவு
கடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக, அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்டது. தற்போது அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டணியில் இணைவது பற்றியும் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவது பற்றி ஆலோசிக்கப்படலாம். தேமுதிக 2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications