அதிமுக, திமுக தோல்வியால் விஜயகாந்த் ஹேப்பியாமே?
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் தோல்வியடைந்திருப்பது யாருக்கு மகிழ்ச்சியோ, நிச்சயம் தேமுதிகவுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் நேற்றெல்லாம் வழக்கத்தை விட கூடுதல் மகிழ்ச்சியுடன் காணப்ட்டாராம்.
நம்மை அழிக்க நினைத்தவர்கள் இன்று அடங்கிப் போய் கிடக்கிறார்களே என தேமுதிக வட்டாரம் பயங்கர ஹேப்பி மோடில் வலம் வருகிறதாம்.
தேமுதிகவால் மறக்க முடியாத இரு கட்சிகள் என்றால் திமுக அதிமுகதான். அதிமுக கூட்டணி சேர்த்து அழித்தது. திமுக தூர நின்று தேமுதிகவை டம்மியாக்கியது.

உயரப் போய் விழுந்த கட்சி
தேமுதிகவைப் போல வளர்ந்த கட்சியும் கிடையாது. அதே வேகத்தில் விழுந்த கட்சியும் கிடையாது. அதிரடியாக வளர்ந்து வந்த தேமுதிக, கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு புயலடித்த பூமி போல சின்னாபின்னமாகி விட்டது.

மமதை மனசுதான் காரணம்
இதற்கு அக்கட்சியின் தலைமையில் நிலவிய மமதையும், நாம இல்லாட்டி யாருமே இல்லை என்ற அலட்சிய மனப்பான்மையும்தான் முக்கியக் காரணம். மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் கட்சியாக இல்லாமல் வழக்கமான அரசியல் கட்சியாக மாறிப் போனதே அதன் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.

மகிழ்ச்சி தந்த ஆர்.கே.நகர்
இந்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக தனது சீரழிவுக்குக் காரணமாக இருந்த அதிமுகவும், திமுகவும் ஆர்.கே.நகரில் மண்ணைக் கவ்வியிருப்பது தேமுதிகவை சந்தோஷப்படுத்தியுள்ளதாம். புத்திசாலித்தனமாக இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடவில்லை. அது நல்லதாகப் போய் விட்டது என்று நினைக்கிறதாம் தேமுதிக தலைமை.

எதிரிக்கு ஒரு கண்ணு போச்சே கதைதான்
நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போச்சே என்ற அல்ப ஆசைதான் இது என்றாலும் கூட திமுக, அதிமுகவின் தோல்வியை தேமுதிக முக்கியமாக எடுத்துக் கொண்டுள்ளதாம். நிச்சயம் நமக்கு எங்கிருந்தாவது கூட்டணிக்கு அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பும் கூடவே எழுந்துள்ளதாம்.

விஜயகாந்த் ஹேப்பி
நேற்று முழுவதும் தேர்தல் முடிவை கட்சித் தலைவர் விஜயகாந்த் உற்சாகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாராம். அவருக்கும் செம ஹேப்பியாம். விரைவில் அதிரடி அரசியலுக்கு அவர் வர வேண்டும் என்று கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications