மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சி துவங்கினார் தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார்
சென்னை: தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார்.
தேமுதிக எம்.எல்.ஏ.வும், கொள்கை பரப்புச் செயலாளருமான சந்திரகுமார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தது குறித்து கடுமையாக விமர்சித்தார். கட்சியும் சரி, விஜயகாந்தும் சரி அவரது மனைவி பிரேமலதாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று சாடினார்.
இதையடுத்து விஜயகாந்த் சந்திரகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 9 பேரை கட்சியில் இருந்து நீக்கினார். தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் உள்பட 10 பேர் சார்பாக கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டிருந்ததாவது,
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று கட்சியின் 95 சதவீத நிர்வாகிகள், தொண்டர்களின் வேண்டுகோளை விஜயகாந்திடம் எடுத்து கூறியதால் சந்திரகுமார் உள்பட 10 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையறிந்த தே.மு.தி.க. தொண்டர்கள், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் எங்கள் கருத்துக்கு செல்போன், இ-மெயில், வாட்ஸ்-அப் மற்றும் நேரிலும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்று, கலந்தாலோசனை கூட்டம் 10-ந் தேதி (இன்று) காலை 10 மணிக்கு சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் உள்ள இ.வி.பி.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க.வில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி மற்றும் கிளைக்கழக செயலாளர், நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிவித்தபடி சென்னை தி.நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் சந்திரகுமார் தலைமையில் போட்டி பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சேலம், ஈரோடு, கும்மிடிபூண்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தேமுதிகவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தை அடுத்து மக்கள் தேமுதிக என்ற கட்சியை துவங்கியுள்ளதாக சந்திரகுமார் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications