ஜெ., கருணாநிதிதானே அவங்க பேரு, அப்படித்தானே அழைக்க முடியும்.. பார்த்தா பலே கேள்வி!
தஞ்சாவூர்: மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரைக் கூட நாம் பெயர் சொல்லித்தான் கூப்பிடுகிறோம். அப்படி இருக்கும்போது ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரையும் பெயர் சொல்லித்தான கூப்பிட முடியும். அதுதான் அவர்களது பெயர். இதில் என்ன தவறு உள்ளது என்று தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி கேட்டுள்ளார்.
தஞ்சாவூர் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வந்திருந்தார் பார்த்தசாரதி. அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

அவதூறு வழக்குகளை எதிர்க்கட்சிகள் மீது வேண்டுமென்றே அதிமுக அரசு போட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் இது போல் அவதூறு வழக்குகள் போடுவது அரசுக்கு வீண் செலவை ஏற்படுத்துகிறது என தன் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.எதிர்க் கட்சிகள் மீது அவதூறு வழக்குகளைப் போடுவதை விட்டு விட்டு மக்கள் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். இப்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு சம்பவங்கள் தினம்தோறும் நடைபெற்று வருகின்றன.
இதையெல்லாம் விட்டு விட்டு சட்ட சபையில் அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதாவை ஜெயலலிதா என பெயரைச் சொல்லி அழைக்க கூடாது என்றும் திமுகவினர் கருணாநிதி பெயரை சொல்லி அழைக்க கூடாது என்றும் விவாதம் செய்கின்றனர். அவர்களுடைய நிஜ பெயர் அதுதானே. வாக்காளர் அட்டையில் அந்த பெயர்தானே இருக்கிறது.
நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மகாத்மாவையே காந்தி என பெயர் சொல்லித்தான் அழைக்கிறோம். ஜவர்கஹலால் நேரு, நரேந்திர மோடி என எல்லாரையும் பெயர் சொல்லித்தான் அழைக்கிறோம். சட்டசபையில் பெயரைச் சொல்லி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. பெயர்களைச் சொல்ல கூட அனுமதிக்கவில்லை என்றால் அது என்ன சட்டசபை என்றார் பார்த்தசாரதி.












Click it and Unblock the Notifications