ஆ.. ஊன்னா... தேமுதிகவில் எல்லாோரும் "ஆம்பளையா இருந்தா".. அப்படின்னு சொல்றாங்களே.. அது ஏன்?
சென்னை: தேமுதிகவில் ஒரு வித்தியாசமான வியாதி பரவி வருகிறது. யாரைப் பார்த்தாலும் "ஆம்பளையா இருந்தா" என்று பேச ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு முன்பெல்லாம் உங்களுக்குத் தைரியம் இருந்தால், துணிச்சல் இருந்தால் என்ற ரீதியில்தான் தலைவர்கள், அரசியல்வாதிகள் பேசிப் பழகி நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்த தேமுதிக காரர்கள் எதற்கெடுத்தாலும் ஆம்பளையாக இருந்தால் என்று பேச ஆரம்பித்துள்ளனர். அது என்ன பேச்சு என்றுதான் தெரியவில்லை.
பிரேமலதா பேச்சு
பிரேமலதா பேச்சை தொடர்ந்து கவனித்து வந்தால் அவர் ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக மறக்காமல், மறந்தும் இருந்து விடாமல் ஆம்பளையாக இருந்தால் என்று பேசுவதைத் தவறாமல் கேட்க முடியும்.
நெஞ்சை நிமிர்த்தி
தனது கணவரையே உதாரணமாக காட்டிப் பேசுவார். கேப்டனைப் போல நெஞ்சை நிமிர்த்தி சரியான ஆம்பளை போல நடக்க வேண்டாமா என்று அதிமுக அமைச்சர்களைப் பார்த்து அடிக்கடி கேட்பது இவரது பாரம்பரியமாக மாறிப் போயுள்ளது.
ஆணாதிக்கமா இருக்கே
அதேபோல ஜெயலலிதாவை குறிப்பிடும்போதெல்லாம் அவரை பெண் போலவா நடந்து கொள்கிறீர்கள், ஆண்களை அடிமைகளாக்கி அல்லி ராணி போல நடந்து கொள்கிறார் என்று சாடுவார் பிரேமலதா. இது ஒரு வகையில்.. ஒரு வகையில் அல்ல.. பல வகையில் பார்த்தாலும் கூட ஆணாதிக்க பேச்சுதான்.
இப்போது பார்த்தசாரதி
இப்போது தலைவி பிரேமலதாவின் வியாதி அக்கட்சியின் எம்.எல்.ஏ.வான பார்த்தசாரதிக்கும் தொற்றிக் கொண்டு விட்டது. அவர் இன்று அளித்த ஒரு பேட்டியில், இப்போது அவர் போக விரும்பும் கட்சியில் மட்டும் சந்திரகுமாருக்கு தலைவர் பதவியா கிடைத்துவிட போகிறது. ஆம்பிள்ளை என்றால், இருக்கும் இடத்தில் இருந்தே வெற்றிக்காக உழைக்க வேண்டும். சந்திரகுமார் மட்டுமல்ல கட்சியிலுள்ள எல்லோரும் கட்சிக்காக உழைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
அது என்னங்க ஆம்பளைக்குரிய இலக்கணம்.. கொஞ்சம் வெளக்கமாதான் சொல்லுங்களேன் மக்களே!