நில அபகரிப்பு வழக்கில் கைதான தேமுதிக எம்.எல்.ஏவை சிறையில் அடைக்க பெரும் இழுபறி
ராஜாவின் தாயார் ஒச்சம்மாள். இவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு புகார் மனு அனுப்பியிருந்தார். அதில், எனக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை எனது நான்கு மகள்களுக்கு பங்கு கொடுக்காமல் எம்.எல்.ஏ. என்கிற தைரியத்தில் என் மகன் ராஜாவே அபகரித்துக்கொண்டான். நான் நியாயம் கேட்டபோதெல்லாம் என்னை மிரட்டினான்.
இதனால் தயவு செய்து தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து ராஜாவை போலீஸார் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்குப் பின்னர் ராஜா கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ராஜா சார்பில் முன்ஜாமீன் கோரி ஒரு மனு உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே ராஜாவைக் கைது செய்து விட்டனர் போலீஸார். இதையடுத்து ராஜாவுக்கு இந்த வழக்கில் ஏற்கனவே முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தேமுதிக வழக்கறிஞர் நீதிபதி தனசேகரனிடம் முறையிட்டார்.
இதையடுத்து, ஜாமீன் மனு தாக்கல் கைதுக்கு முன்பு நடந்ததா? இல்லை அதற்கு பிறகா என்பதை அறிந்து, பின்னர் உத்தரவு பிறப்பிக்கிறேன் என்று நீதிபதி கூறிவிட்டார். இதனால் ராஜாவை சிறையில் அடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பெரும் இழுபறிக்குப் பின்னர் ராஜாவை போலீஸார் சிறைக்குக் கொண்டு சென்று ரிமாண்ட் செய்தனர்.