அடிக்கலை... ஆனால் அடிச்சாலும் நல்லதுக்குதான்... விஜயகாந்திடம் 'அடி'வாங்கிய சிவக்கொழுந்து விளக்கம்
சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தம்மை அடிக்கவில்லை; அப்படி அடித்தாலும் எங்களை நல்வழிப்படுத்ததான் என்று அக்கட்சி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து விளக்கம் அளித்துள்ளார்.
பண்ருட்டி பகுதியில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட விஜயகாந்த் திடீரென தம்முடன் பிரசார வேனில் நின்று கொண்டிருந்த எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தை சரமாரியாகத் தாக்கினார். மேலும் வேன் டிரைவரையும் அவர் உதைத்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சிவக்கொழுந்து எம்.எல்.ஏ. அளித்துள்ள விளக்கம்:
எங்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழக எதிர்கட்சித்தலைவருமான விஜயகாந்த் கடலூர் மாவட்டம் வருகை தந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் சொல்லி நிவாரண உதவிகளையும் வழங்கி சென்றிருக்கிறார்.

ஆங்காங்கே தமிழக அமைச்சர்கள் பெயரளவில் பணி மேற்கொண்டு வந்தாலும் விஜயகாந்த் கடலூர் வந்து பார்த்த பொழுதுதான் அரசாங்கத்தின் நிவராண நடவடிக்கைகள் மக்களைச் சென்றடையவில்லை என்ற செய்தியை தமிழக ஊடங்களுக்கு தெரிவித்தார்.
தூர்வார வேண்டிய ஏரிகளும் அகலப்படுத்தி ஆழப்படுத்தாத ஆறுகளும்தான் இந்த வெள்ளப் பெருக்கிற்கு காரணம் எனவும் பகிரங்கமாக அறிவித்ததுடன் வீராணம் ஏரி தூர்வார ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது? என்ற கேள்வியும் எழுப்பினார்.
அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஊடகங்கள் செயல்படுகின்றனவா? என எண்ணும் அளவிற்கு என்னை அடித்தார் என்ற செய்தியை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஊடகங்களுக்கு நான் தரும் விளக்கம், விஜயகாந்த் என்னை அடிக்கவில்லை. என்னை விஜயகாந்த் அடித்தார் என செய்தி வெளியிட்ட அனைத்து ஊடகங்களையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி எம் தலைவர் தந்தது. அதற்கான பணியில் என்னை தீவிரப்படுத்தி தினம் உழைத்து வருகிறேன். வெள்ள நிவாரணப் பணிகளை விஜயகாந்த் அருகில் இருந்து செயல்படுத்திய தருணம் தான் என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம்.
ஊடகங்களே, உங்கள் பாணியில் எங்கள் தலைவர் எங்களை அடிப்பதாக எடுத்துக் கொண்டால் கூட நல்வழிப்படுத்த அடிப்பாரே தவிர யாருக்கும் அடிமையாக இருக்க அனுமதிக்க மாட்டார்.
இவ்வாறு சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications