பாமக பங்கேற்பு.. குடும்பத்தோடு வருகிறார் விஜயகாந்த் - மதிமுக புறக்கணிப்பு
சென்னை: மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது என்று தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதே சமயம் பதவியேற்பு விழாவை மதிமுக புறக்கணிக்கிறது.
மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால் பதவியேற்பு விழாவை முதல்வர் ஜெயலலிதா புறக்கணிக்கிறார். இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியா ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பாஜகவின் அழைப்பை ஏற்று அவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். பாமக தலைவர் ஜி.கே. மணி மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதில் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே டெல்லிக்கு சென்றுவிட்டார். ஜி. கே. மணி இன்று காலை டெல்லிக்கு சென்றார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று இரவு அல்லது நாளை காலை குடும்பத்துடன் டெல்லிக்கு செல்கிறார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று இரவு டெல்லி செல்கிறார். இந்நிலையில் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து மதிமுக மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறது. ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக நாளை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications