தேர்தல் தோல்வி எதிரொலி: முரசு, மாம்பழம் சின்னங்கள் பறிபோகின்றன

தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, எந்த ஒரு கட்சியாவது அது போட்டியிடும் மாநிலத்தில் மொத்தம் பதிவாகும் வாக்குகளில் ஆறு சதவீதத்தைவிட குறைவாக பெற்றிருந்தால், அவை அம்மாநிலத்தில், அங்கீகாரம் இல்லாத கட்சிகளாகத்தான் கருதப்படும்.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 5 லட்சத்து 54 ஆயிரத்து 957 வாக்குகள் பதிவாகின. இதில் ஆறு சதவீதம் என்றால் அது 24 லட்சத்து, 33 ஆயிரத்து 297 வாக்குகளாகும். 14 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்த்தின் தேமுதிக 20 லட்சத்து 79 ஆயிரத்து 392 வாக்குகளைதான் பெற்றுள்ளது. இது மொத்த வாக்குகளில், 5.13 சதவீதமாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக 10.3 சதவீத வாக்குகளை பெற்று அசத்தியிருந்தது.
இதேபோல, ராமதாசின் பாமக மொத்தம் 18 லட்சத்து, நாலாயிரத்து 812 வாக்குகளை பெற்று 4.45 சதவீத வாக்குகளை மட்டும் ஈட்டியுள்ளது. இந்த கட்சி 8 தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக 6.4 சதவீத வாக்குகளை எடுத்திருந்தது. இத்தேர்தல் பின்னடைவால், தேமுதிகவின் முரசு சின்னமும், பாமகவின் மாம்பழ சின்னமும் பறிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து தேமுதிக கட்சியின் கொறடா வி.சி.சந்திரகுமார் கூறுகையில், " எங்கள் சின்னத்தை இழப்பது தொடர்பாக எந்த ஒரு தகவலும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை. அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் உரிய நடவடிக்கையை எடுப்போம்" என்றார்.
இதேபோல ஆறு விழுக்காடு வாக்குகளை பெறாத வைகோவின் மதிமுக கட்சியும் தனது சின்னத்தை இழக்க உள்ளது.












Click it and Unblock the Notifications