தேமுதிக பொங்கல் விழாவில் ஜெயலலிதா குறித்து விஜயகாந்த் ஆபாச பேச்சு
வாலஜா: முதல்வர் ஜெயலலிதா குறித்து தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், தரக்குறைவாக பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த சுங்க சாவடி அருகே தேமுதிகவின் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வண்ணம் நாட்டுப்புற கலைஞர்களின் ஆடல் பாடல் மயிலாட்டம் , உள்ளிட்டவை இடம் பெற்ற கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் விஜயகாந்த் பேசுகையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறமால் போனதற்கு அதிமுக அரசு தான் காரணம் என கூறினார். மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அருவெறுக்கத்தக்கவையாக பேசியதாகவும் கூறப்படுகிறது. அதிக அளவில் தொண்டர்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் இப்படி பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை விழா நடைபெறும் இடத்திற்கு விஜயகாந்தின் பாதுகாவலர்கள் அனுமதி அளிக்கவில்லை. தகாத வார்த்தைகளால் செய்தியாளர்களை அவர்கள் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வாலாஜா காவல் நிலைய உதவி ஆய்வாளர் உமாராணி, செய்தியாளர்களை தாக்க முற்பட்ட விஜயகாந்தின் அடியாட்களை எச்சரித்தார். அப்போது அவருக்கும் விஜயகாந்த்தின் பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications