கேப்டன் டிவி கோவிந்தா? பங்குதாரர் சங்கர் தலைமையில் 50 தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்
சென்னை: தேமுதிகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கேப்டன் டிவியின் பங்குதாரரான சங்கர் தலைமையில் 50 தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். இதனால் கேப்டன் டிவி ஒளிபரப்பு தொடருமா என்ற கேள்விக்குறி உருவாகியுள்ளது.
அதிமுக, திமுகவுக்கு ஜெயா, கலைஞர் தொலைக்காட்சிகள் இருப்பது போல தேமுதிகவுக்கும் கேப்டன் டிவி, கேப்டன் நியூஸ் ஆகிய சேனல்கள் உள்ளன. தேமுதிகவுக்கு பிரசார பீரங்கியாக இருந்து வருகிறது இந்த டிவி சேனல்கள்.

தற்போது கேப்டன் டிவியின் பங்குதாரரும் தேமுதிக மாநில மாணவர் அணி துணைச் செயலருமான வழக்கறிஞர் லயன் எஸ். சங்கர், தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
அவருடன் காஞ்சிபுரம் மாவட்ட தே.மு.தி.க.வைச் சேர்ந்த குன்றத்தூர் ஒன்றிய கேப்டன் மன்ற துணைச் செயலாளர் வெங்கடேஷ் கோபு, குன்றத்தூர் பேரூர் முன்னாள் செயலாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் சூரியமூர்த்தி, பீர்க்கன்கரணை பேரூர்ச் செயலாளர் ஜி.பி.ராமு, பல்லாவரம் நகர துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, பல்லாவரம் நகரம், 33வது வட்டச்செயலாளர் திருவேங்கடம், குன்றத்தூர் ஒன்றியம், ஓரத்தூர் ஊராட்சி செயலாளர் முரளி, திருபெரும்புதூர் ஒன்றியம், பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சி செயலாளர் சரவணன், பல்லாவரம் நகர முன்னாள் பொருளாளர் குலசேகரன் உட்பட 50க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் தே.மு.தி.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
சங்கர் தற்போது திமுகவில் இணைந்துள்ள நிலையில் கேப்டன் டிவி, கேப்டன் நியூஸ் சேனல்கள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டசபை தேர்தலில் படுதோல்வியடைந்ததால் தேமுதிகவின் அதிகாரப்பூர்வ சின்னமான முரசு பறிபோனது. தற்போது பிரசார பீரங்கியான டிவியும் கைவிட்டுப் போவது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications