திடீரென மோடிக்கு எதிர்ப்பு- ஸ்டாலினுக்கு வக்காலத்து.. திக்கு தெரியாமல் திணறுதா தேமுதிக?
தேமுதிக திடீரென மோடியை எதிர்ப்பதும் ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குவதும் அக்கட்சி என்ன திசையில் செல்வது என தெரியாமல் தத்தளிப்பதையே காட்டுகிறது.
சென்னை: தமிழக அரசியல் வானிலையில்தான் நாள்தோறும் எத்தனை எத்தனை மாற்றங்கள்.. டெல்லிக்கு முட்டுக் கொடுத்து கொண்டிருந்த தேமுதிக இப்போது அதிமுகவை முன்வைத்து வசைபாடவும் திமுகவுக்கு வக்காலத்து வாங்கவும் தொடங்கியுள்ளது.
திமுக, அதிமுக கட்சிகளுக்கு ஒரே மாற்று தேமுதிக என அக்கட்சி கூறிவந்தது. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் 2% அளவுக்குதான் அக்கட்சியால் வாக்குகளைப் பெற முடிந்தது.
இத்தனைக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என முன்னிறுத்தப்பட்டும்கூட இந்த நிலைமைதான் அக்கட்சிக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த ஓராண்டு காலமாகவே தேமுதிக அப்படியே மவுனமாகிவிட்டது.

மோடிக்கு அன்று பாராட்டு
அதேநேரத்தில் அவ்வப்போது பிரதமர் மோடிக்கு பாராட்டுகளையும் தெரிவிக்கவும் அக்கட்சி மறக்கவே இல்லை. தற்போது அதிமுகவின் 3 கோஷ்டிகளும் டெல்லிக்கு காவடி எடுத்துக் கொண்டு யாத்திரை செல்கின்றன.

சேனல் விவாதத்தில் பிரேமலதா
இந்நிலையில் புதிய தலைமுறை சேனலின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கலந்து கொண்டார். அவரிடம் அதிமுகவை பாஜக கட்டுப்பட்டுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

மோடிக்கு கண்டனம்
இதற்கு பதிலளித்த பிரேமலதா, அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடக் கூடாது. தமிழக விவசாயிகளை சந்திக்க மறுத்தவர் பிரதமர் மோடி.

பொதுவான பிரதமர் தேவை
ஆனால் எந்த ஒரு பதவியிலும் இல்லாத ஓபிஎஸ்ஸை அடிக்கடி சந்திக்க நேரம் ஒதுக்குவது ஏன்? பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.

ஸ்டாலினை ஏன் சந்திக்கவில்லை?
திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் விவசாயிகளும் மோடியை சந்திக்க நேரம் கட்டும் ஒதுக்க மறுக்கிறார். இது தவறானது அல்லவா? என சாடியிருந்தார்.

வெளிச்ச திசை நோக்கி?
திமுக பக்கமே தலைவைத்து படுக்கப் போவதில்லை என சத்தியம் அடிக்காத குறையாத பேசிவந்தது தேமுதிக. இப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்கிற நிலையில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது தெரியாததாலேயே வெளிச்சம் தரும் திசை நோக்கி தேமுதிக பயணிக்க முயற்சிக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications