புதுக்கட்சி, எதிர்க்கட்சி, தேமுதிக இனி ஆளும் கட்சி.. பல்லடத்தில் பிரேமலதா 'பஞ்ச்'
பல்லடம்: 2006ல் தே.மு.தி.க. புதுகட்சி, 2011ல் எதிர் கட்சி, 2016ல் ஆளும் கட்சியாக திகழும் என்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
திருப்பூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பல்லடத்தில் மக்களுக்காக மக்கள் பணி திட்டத்தின் கீழ் சித்த, ஆயுர்வேத, யுனானி டாக்டர்களுக்கும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: திருவாரூரில் மக்களுக்காக மக்கள் விழாவை விஜயகாந்த் தொடங்கியது முதல் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. ஆனாலும், கூட்டம் முடிந்த பின்னர் தான் மழை வரும். அதுவரை வருண பகவானின் அருட்கருணை விஜயகாந்திற்கு உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் வரி உயர்த்திய போது அதனை எதிர்த்து போராடியது தேமுதிக-தான் அதனால் தான் வரி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனையை தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் செய்ய வேண்டும்.
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயத்தை தான் அரசு பரிந்துரை செய்துள்ளது. நம்முடைய பராம்பரிய நாட்டு வைத்தியத்தை உலக அளவில் கொண்டு சேர்ப்போம்.
திருப்பூர் சாய கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்சனைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவு நீரை கடலுக்கு கொண்டு சென்று கலப்பதுடன் அதில் இருந்து மின் உற்பத்தி செய்யக்கூடிய திட்டங்களை செயல்படுத்தவில்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தேமுதிக ஆட்சி அமையும். அவிநாசி-அத்திக்கடவு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவோம். பல்லடத்தில் கலைக்கல்லூரி அமைக்கப்படும்.
கேரளாவில் கள்ளை உணவு பதார்த்தங்கள் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் அது போல் தமிழகத்தில் போதை இல்லா கள்ளை அடிப்படையாக கொண்டு உணவுகள் தயாரிக்க திட்டங்கள் உருவாக்கி விவசாயிகளை பாதுகாப்போம்.
அப்பா, அம்மா ஆட்சியை அமைத்து பார்த்து விட்டீர்கள். உங்கள் சின்னகவுண்டர் அண்ணன் ஆட்சி அமைய ஒரு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டே தீரும். 2006ல் தே.மு.தி.க. புதுகட்சி, 2011ல் எதிர் கட்சி, 2016ல் ஆளும் கட்சியாக திகழும். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications