தேமுதிக பாஜக கூட்டணிக்கு வரும், பாமகவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்: இல. கணேசன்
சென்னை: தேமுதிக பாஜகவுடன் கூட்டணி வைக்க வரும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் அவருக்கு போனில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
கணேசன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேமுதிகவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியதன் காரணம் என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு வேளை மத்திய அரசு பிரச்சனை தொடர்பாக பிரதமரை சந்தித்திருந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியாது. காரணம் அவர் ஒரு தபால்பெட்டி போன்று தான். அவரால் தபால்களை டெலிவரி செய்ய மட்டுமே முடியும்.
மோடி அலையை பயன்படுத்தி வலுவான கூட்டணி அமைக்க தேமுதிக எங்களுடன் சேர வேண்டும் என்பது எங்களின் விருப்பம். அவர்கள் எங்களுடன் வந்து சேர்வார்கள் என்று நம்புகிறோம். மேலும் பாமகவுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.