சென்னையில் 4 மாவட்டச் செயலாளர்கள் பதவியைப் பிடிக்க திமுகவில் கடும் போட்டி
சென்னை: சென்னையில் 4 மாவட்டச் செயலாளர்கள் பதவியைப் பிடிக்க திமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது.
வட சென்னை மாவட்டம் வடக்கு, கிழக்கு என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வட சென்னை மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதனுக்கும் முன்னாள் திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர் சுதர்சனத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதே போல கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க சேகர் பாபு முயன்று வருகிறார். இவருக்கு ஸ்டாலினின் ஆதரவு இருந்தாலும் திமுகவிலேயே ஒரு தரப்பின் கடும் எதிர்ப்பும் நிலவுகிறது. காரணம், இவர் அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதோடு அதிமுகவில் இருந்தபோது சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதியையே திட்டியபடி அடிக்கப் பாய்ந்தவர் என்பதை நினைவுகூறுகின்றனர் இவரது எதிர்ப்பாளர்கள்.
அதே போல தென் சென்னையைப் பொறுத்தவரை இந்த மாவட்டம் தெற்கு, மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் மேற்கு மாவட்டத்தில் ஜெ.அன்பழகனுக்கு போட்டியாக கு.க.செல்வம் முட்டி மோதுகிறார். ஆனாலும் அன்பழகனுக்கு கட்சியினர் மத்தியிலும் மாவட்ட நிர்வாகிகள் மத்தியிலும் எப்போதுமே தனிப்பட்ட செல்வாக்கு உண்டு.
மனதில் பட்டதை பேசிவிடுவார், எதையும் மறைக்க மாட்டார், தவறுகளை சுட்டிக் காட்டுவார் என்பதால் கருணாநிதியிடமும் அன்பழகனுக்கு தனி இடம் உண்டு. ஆனாலும் இவருக்கு எதிராக செல்வத்தை ஒரு தரப்பு தயார் செய்து கொண்டுள்ளது.
அதே போல தெற்கு மாவட்டத்துக்கு முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் தனசேகரன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கே.கே.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரியில் தனசேகரனுக்கு பெருவாரியான ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால், ஸ்டாலினுடனான நெருக்கத்தை மட்டுமே முன் வைத்து மா.சுப்பிரமணியன் பதவியைப் பிடிக்க முயல்வதாக புகார் எழுந்துள்ளது.
தனசேகரனுக்கு கருணாநிதியின் முழு ஆசிர்வாதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மா.சுப்பிரமணியனுக்கு ஸ்டாலினின் ஆதரவு முழுமையாக இல்லை என்கிறார்கள்.
நான் தான் மாவட்டச் செயலாளர், ஸ்டாலினே சொல்லி விட்டார் என்று மா.சுப்பிரமணியன் தரப்பு பரப்பி விட்டதாகவும் இதை ஸ்டாலினே ரசிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.
இதனால் இந்த மாவட்டத் தலைவர் பதவியைப் பிடிக்கப் போவது யார் என்பதில் பெரும் சஸ்பென்ஸ் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications