அதிமுகவுக்கு ஆதரவு.... தந்தி டிவி விவாதங்களில் பங்கேற்காமல் புறக்கணிப்பு: திமுக அறிவிப்பு
சென்னை: அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதால் தந்தி டி.வி விவாதங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்போம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:
ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஆளும் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாகவும் தி.மு.கழகத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்து வருவது ஒரு சில ஊடகத் துறையினரின் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது 'நடுநிலை' என்ற பெயரை சூட்டிக் கொண்டுள்ள 'தந்தி தொலைக்காட்சி' ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாகவும் தி.மு.கழகத்துக்கு எதிராகவும் தொடர்ந்து திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.
குறிப்பாக, பல்வேறு விவாதங்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்களை வைத்துக் கொண்டு- உண்மைக்கு மாறாக- தி.மு.க. தரப்பில் பதில் அளிக்க உரிய வாய்ப்பு அளிக்காமல்- ஆளும் அ.தி.மு.கவுக்கு பிரச்சாரம் செய்து வருவதால் தி.மு.க, 'தந்தி தொலைக்காட்சி'யில் நடைபெறும் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தி.மு.க. அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.