தேர்தல் தோல்வி... குழந்தைகளுக்கு ‘மருந்து’ கொடுத்து கலைஞர் சாப்பிட வைப்பார்: அன்பழகன் பேச்சு
சென்னை: நாடாளுமன்ற தோல்வியால் துவண்டு விடாமல், வரும் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன்.
நேற்று தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் பகுதியில் பொதுக் கூட்டமும், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜே.ஜே. எபினேசர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு உதவிகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

அண்ணாவின் கனவு....
பெரியார், அண்ணா வழியில் அவர்கள் கண்ட கனவுகள் நினைவாக்கி வந்து கொண்டிருக்கிறார் கலைஞர். தமிழ் நாட்டில் மட்டுமின்றி, அகில இந்திய அளவிலும் அவரது பணி தொடர்கிறது.

பராசக்தி வசனம்...
கலைஞரை விட ஆற்றல் மிக்க தலைவர்கள் இன்று யார் உள்ளார்கள் ஆற்றல் மிக்க பேச்சாளர் மட்டுமல்ல அவர் சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய பராசக்தி வசனம் இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பெருமகிழ்ச்சி...
91-வயது ஆகும் கலைஞரை 92 வயதாகும் நான் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அவரை விட ஆற்றல் மிக்க தலைவர் இன்று யாரும் இல்லை.

பெண்கள் முன்னேற்றம்...
பெண்களுக்கான சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு வந்தவர் கலைஞர். பெண்களை சமுதாயத்தில் உயர்த்தியது மட்டுமின்றி, அவர்களுக்காக எத்தனையோ திட்டங்களைத்தீட்டி செயல்படுத்தியவர் தான் கலைஞர்.

பறிக்கப்பட்ட வெற்றி...
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. எப்படி தோற்றது? தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை. வழிப்பறி நடந்து விட்டது. வெற்றி தட்டிப்பறிக்கப்பட்டு விட்டது.

நமக்கு மட்டுமல்ல...
நமது கட்சி வாக்குகள் மட்டுமல்ல, விஜயகாந்த் ராமதாஸ் கட்சியினரின் வாக்குகள் பறிபோய் உள்ளது.

மருந்து கொடுப்பார்...
நாடாளுமன்ற தோல்வியால் நாம் துவண்டு விடவில்லை. ஒரு தாய், தனது குழந்தை சரியாகச் சாப்பிடாவிட்டால் அப்படியே விட்டு விட மாட்டார். மருந்து கொடுப்பார். மீண்டும் குழந்தையை சாப்பிட வைப்பார்.

வெற்றிக்காக உழைப்போம்...
அதுபோல கலைஞர் செயல்படுகிறார். நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து விட்டாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற தொண்டர்கள் சோர்வடையாமல், பணியைத் தொடர வேண்டும். அதற்காக உழைப்போம்.

மக்கள் சேவையில்...
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலம் தி.மு.க. தொடர்ந்து மக்கள் பணியாற்றும்' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications