கூட்டணி கதவு மூடப்பட்டுவிட்டது... எந்த கட்சிக்கும் இனி அழைப்பு இல்லை: மு.க. ஸ்டாலின்

லோக்சபா தேர்தலில் தேமுதிகவை வளைத்துப் போட திமுக பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. திமுக அணியில் தேமுதிக இடம்பெறுமா என்ற சந்தேகம் நீடித்து வந்தது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நேற்று பல்வேறு கட்சிகளில் இருந்து 4 ஆயிரத்து 806 பேர் விலகி தி.மு.க.வில் இணையும் விழா நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
லோக்சபா தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு மற்றவர்கள் தி.மு.க மீது கொண்டிருந்த கண்ணோட்டம் மாறிவிட்டது. தி.மு.க.வின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்திருப்பதை திருச்சி மாநாடு உறுதி செய்துள்ளது.
தி.மு.க. தற்போது 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலை நடத்தி முடித்துள்ளது. நேர்காணலின் போது கலந்துகொண்ட தி.மு.க.வினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக தெரிவித்த கருத்து, தி.மு.க. கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும்.
அதற்கு தி.மு.க தற்போது அமைத்துள்ள கூட்டணியே போதுமானதாகும் என்பதுதான். எனவே தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டது. இனிமேல் எந்த கட்சிக்கும் அழைப்பு கிடையாது.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனால் திமுக தற்போதுள்ள விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக் கட்சி போன்றவற்றுடனேயே தேர்தலை சந்திக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications